மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம்.. என்ன செய்வார் ஓபிஎஸ்.. வீட்டில் குவிந்த தொண்டர்களுடன் சந்திப்பு
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் தன் வீட்டு வாசலில் குவிந்திருந்த தொண்டர்கள் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தார்.
சென்னை: ஒற்றைத்தலைமை விவகாரம் ஒருபுறம் பரபரப்பை எட்டிய நிலையில் தனது வீடு முன்பாக குவிந்துள்ள தொண்டர்களை சந்தித்து பேசியுள்ளார் ஓ. பன்னீர் செல்வம். தொண்டர்கள் பலரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
Recommended Video
ஒற்றைத் தலைமை குறித்து நிர்வாகிகளுடன் 8வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில் தொண்டர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாகி வருகிறது. கடந்த 8 நாட்களாகவே அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ், இபிஎஸ் வீடுகளில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இருவரின் வீடுகளில் வாசல்களிலும் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

ராஜன் செல்லப்பா
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக மாவட்ட செயலாளர்கள் பலரும் வரிசையாக சந்தித்து வருகின்றனர். அதிமுகவின் ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்பார் என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் விருப்பம். மாற்று கருத்து கொண்டவர்களும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் தீர்மானத்தை பன்னீர்செல்வம் வழிமொழிய வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார். பன்னீர்செல்வம் அரசியலில் யாருக்கும் துரோகம் செய்யாதவர் என கூறினார். இரட்டை தலைமையால் மாவட்ட செயலாளர்களின் களப்பணி பாதிக்கப்படுவதால் ஒற்றை தலைமை அவசியம் என தெரிவித்தார்.

இபிஎஸ்க்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு
தென்மாவட்ட செயலாளர்கள் 99 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக நிர்வாகிகளையும், மாவட்ட செயலாளர்களையும் வளைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டு வாசலிலும் தொண்டர்கள் குவிந்து முழக்கமிட்டு வருகின்றனர். கைகளில் பதாகைகளையும் ஏந்தியுள்ளனர்.

தொண்டர்களுடன் ஓபிஎஸ் சந்திப்பு
ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் ஓ.பன்னீர் செல்வம் இன்று எட்டாவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதே நேரத்தில் தன்னை சந்திக்க வந்த தொண்டர்களையும் சந்தித்த பேசினார். அப்போது குவிந்திருந்த தொண்டர்கள் ஏராளமானோர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக முழக்கமிட்டனர். அப்போது பொதுக்குழு நடைபெறுமா? நீங்கள் கலந்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்க வில்லை.












Click it and Unblock the Notifications