ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் தெளிவான முடிவை எடுப்பார்.. புகழேந்தி சொன்ன முக்கிய பாய்ண்ட்!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தெளிவான முடிவை எடுப்பார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுகவில் ஆட்சி மன்றக் குழுவை கூட்டாமல் எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரம் செய்வதாக புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு மூலம் தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவேரா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, தொடர்ச்சியாக இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் பின்னர் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஜன.23ல் ஓ பன்னீர் செல்வம் முக்கிய ‛மூவ்’.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை..ஆஹா
அதிமுக போட்டி
திமுக தரப்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ்-க்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகளில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். மறுபக்கம், அதிமுக தரப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில், நேரடியாக அதிமுகவே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் ஆலோசனை
ஆனால் ஓபிஎஸ் அணி தரப்பிலும் வேட்பாளர் களமிறக்கப்பட்டால் இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஜனவரி 23ல் ஆலோசனை கூட்டத்திற்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில்,ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் நிறுத்த தயாராக இருக்கிறோம். ஏராளமானோர் ஓபிஎஸை தேடி வருகின்றனர்.
சர்வாதிகாரம்
அதிமுக பிளவுபட்டால் யாருக்கு லாபம். நாங்கள் ஒற்றுமையை எதிர்பார்த்து இருக்கிறோம். ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே அதிமுக வெற்றிபெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தெளிவான முடிவு எடுப்பார். எடப்பாடி பழனிசாமி தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என்று சொல்வது தவறு. அதிமுகவில் ஆட்சி மன்றக் குழுவை கூட்டாமல் எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரம் செய்கிறார்.
இபிஎஸ் எழுதிய கடிதம்
அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரத்திற்கு எதிராகவே நாங்கள் போராடி வருகிறோம். அதுமட்டுமல்லாமல், தான் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அதனால் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் சின்னம் ஓபிஎஸ் கையெழுத்து போட்டால் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்தார்.