அடடே.. இது செம்மயா இருக்கே! இபிஎஸ்-ஐ விட ஓபிஎஸ்-க்கு தான் ‘ஆதரவாளர்கள்’ அதிகம்! இங்க பாருங்க டேட்டா!
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக பலத்த விவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யாருக்கு அதிகம் என பார்த்தால், நமக்கு கிடைத்துள்ள 'தகவல்கள்' அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் ஆதரவாளர்கள் அதுவும் இரு மடங்கு அதிகமாக உள்ளனர். அது எப்படி என பார்க்கலாம்..
Recommended Video
சண்டை, சச்சரவுகள், நீதிமன்றம், காவல்துறை கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஏற்கெனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சிக்கலை பாருங்க.. உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?
அதிமுக பொதுக்குழு
இதனால் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லாமல் போனதால் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர். இது இபிஎஸ் தரப்புக்கு லேசான பின்னடைவாகக் கருதப்பட்டது. இந்நிலையில், தொண்டர்கள் என் பக்கம் என ஓ.பன்னீர் செல்வம் உறுதியாகக் கூறி வருகிறார். அதே நேரத்தில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் தங்கள் பக்கம் உறுதியாக நிற்கின்றனர் அதனால் எங்களுக்குத்தான் ஆதரவு அடித்துச் சொல்கிறது இபிஎஸ் தரப்பு.
தொண்டர்கள் ஆதரவு
அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் தான் என நிரூபிப்பதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ஓபிஎஸ் தரப்பு. குறிப்பாக வேறு யாரையும் நம்பாமல் தனது மகன்களையே களத்தில் இறக்கி இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். கடந்த முறை அதிமுக பொதுக்குழு நடந்த போதும் சரி, அதற்கு முன்னதாக சென்னை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்து போதும் சரி நூற்றுக்கணக்கான தொண்டர்களை தென் மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்திருந்தது ஓபிஎஸ் தரப்பு இதற்கு முழு முதற் காரணம் அவரது மகன் ஜெயபிரதீப் தான் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர்.
இபிஎஸ் திட்டம்
அதே நேரத்தில் மாவட்ட செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அதிமுகவினர் அனைவரும் தங்கள் பக்கம் தான் என இபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். பொதுக்குழுவிலும் சரி இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் சரி எடப்பாடி ஆதரவு வாசம் சற்று அதிகமாகவே இருந்தது. கட்சிக்குள் தனக்கு தான் ஆதரவு இருக்கும் என்பதை காட்டிக் கொள்ளும் வகையில் அதிக அளவில் தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் செய்திருந்தனர். குறிப்பாக ராயபுரம் ராயப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அதிக அளவிலான அதிமுக தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் நிரப்பப்பட்டிருந்தனர்.
அதிக ஆதரவு
தொண்டர்களின் ஆதரவு யாருக்கு என்பது ஒருபுறம் இருந்தாலும் இருவரையும் பொறுத்தவரை பன்னீர்செல்வத்துக்கு தான் ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கிறது. ஆதரவாளர்கள் என்றால் நேரடியான அதிமுக தொண்டர்கள் இல்லை ஓபிஎஸ்ஸை பின்தொடர்பவர்கள். அப்படி பார்க்கும் போது ட்விட்டரில் அதிக அளவிலான ஃபாலோயர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் உள்ளார். அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரை சுமார் 889 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். அதிமுக ஒற்றை தலைமையாக முன்வைக்கப்படும் எடப்பாடி பழனிசாமியை 484 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். அந்த வகையில் பார்க்கும் போது எடப்பாடி பழனிச்சாமி விட பன்னீர் செல்வத்திற்கு ட்விட்டரில் இரு மடங்கு அதிக ஆதரவு உள்ளது.