எல்லா பக்கமும் கேட் போட்டா எப்படி? பரபரத்த தேனி டீம்..முக்கிய ஆலோசனையாம்! இது தான் ஓபிஎஸ் திட்டமா?
சென்னை : அதிமுக விவகாரம் தற்போது உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் தன் பக்கம் சில சாதகமான அம்சங்கள் நடந்து வரும் சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதில் முக்கிய முடிவுகள் சில எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது.
தற்போது அதிமுகவின் பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்பதுதான் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையத் தரவுகளின் படி இன்னும் மூன்று ஆண்டுகள் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவே தொடர்கிறார். இதன் காரணமாக அவர் ஒப்புதல் இன்றி நடந்த பொதுக்குழு செல்லுமா என்பது கேள்வியாக இருக்கிறது.-

அதிமுக வழக்கு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த விதிகள் உச்ச நீதிமன்றத்தில் படித்துக் காட்டப்பட்டது இதை அடுத்து எடப்பாடி தரப்பின் இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டு அன்றைய தினம் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜக மேலிடம் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பதும் குழப்பமாகவே இருக்கிறது.

பொதுச்செயலாளர்
மத்திய அரசு சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் என்றும் பொதுச் செயலாளர் என்றும் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய அரசு அழைத்தது. அதே நேரத்தில் மாநில தேர்தல் ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓ பன்னீர் செல்வத்துக்கு கடிதம் அனுப்பியது. இதனால் இருதரப்பு குழப்பத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் நீதிமன்ற தீர்ப்பு மூலம் தற்போதைக்கு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இப்படி அடுத்தடுத்து குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில் அடுத்து என்ன முடிவெடுக்கலாம் என ஓபிஎஸ் மிகுந்த குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி
இதனைத் தொடர்ந்து அவர் தரப்பு ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக வைத்தியலிங்கம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர் அவர்கள் ஆதரவாளர்கள் ஆகிய குறிப்பிட்ட சிலரே இதில் பங்கேற்று இருக்கின்றனர். மேலும் வழக்கறிஞர் அணியும் இந்த ஆலோசனையில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி என்ன மாதிரியான வாதங்களை முன் வைப்பார்கள் அவ்வாறு வாதம் முன்வைக்கப்படும்போது தங்கள் தரப்பில் இருந்து இடைமறித்து தகவல்களை தெரிவிக்க முடியுமா தீர்ப்பு யார் பக்கம் சாதகமாக வரும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் திட்டம்
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி பயணம் மேற்கொண்டு பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அப்பாயிண்ட்மெண்ட் பெரும் பணிகளானது கடந்த வாரமே தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் அந்த சந்திப்பும் நிகழலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் தேர்தல் ஆணையத்தில் தாங்கள்தான் ஒருங்கிணைப்பாளர் என்பதால் எப்படியும் இன்னும் நீண்ட நாட்களுக்கு இந்த சட்ட போராட்டத்தினை எடுத்துச் செல்ல ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் அதிமுகவில் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications