சென்னையில் நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம்... ஓபிஎஸ் பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா? அதிமுகவில் டென்ஷன்
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பாரா? அல்லது புறக்கணிப்பாரா? என்பது அதிமுகவில் நடைபெற்று வரும் விவாதம்.
சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையேயான பனிப்போர் பகிரங்கமாக வெடித்தது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கொண்டார்.
ஓபிஎஸ் அதிருப்தி
இதில் கடும் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வேண்டாம் என கூறி வருகிறார். அதேபோல் சட்டசபையில் அதிமுக கொறடா யார் என்பதும் முடிவு செய்யப்படாமல் இருக்கிறது.
யார் யாருக்கு பதவிகள் கிடைக்கும்?
ஓபிஎஸ், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுத்தால் கே.பி. முனுசாமிக்கு அந்த பதவி கிடைக்கலாம். மேலும் கொறடா பதவியை சீனியர்களான திண்டுக்கல் சீனிவாசன் அல்லது நத்தம் விஸ்வநாதன் ஆகியோரில் ஒருவர் பெறக் கூடும் என தெரிகிறது.
எடப்பாடிக்கே அதிக ஆதரவு
இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்; ஆகையால் எடப்பாடி பழனிசாமி அணி நினைப்பது மட்டுமே அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிறைவேறுகிறது என்பது ஓபிஎஸ் தரப்பின் கவலை.
ஓபிஎஸ் புறக்கணிப்பாரோ?
மேலும் அதிமுக எம்.எல்.ஏக்களில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே தம்மை ஆதரிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் தமக்கு அவமானம்தான் ஏற்படுகிறது. இதனால் நாளைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணிக்கலாமா? என்கிற யோசனையிலும் இருக்கிறதாம் ஓபிஎஸ் தரப்பு. நாளைய கூட்டத்துக்கு ஓபிஎஸ் வருவாரா? வரமாட்டாரா என்பதே அதிமுகவின் விவாதம்.