தட்றோம் தூக்குறோம்..அதிமுக 2.0! அதிரடி முடிவெடுத்த ஓபிஎஸ்! ’கிளை’ முதல் ’தலை’ வரை! தயாரான பட்டியல்!
சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தொடர்வதாக கூறிவரும் ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழக நிர்வாகிகள் முதல் கிளை கழக நிர்வாகிகள் வரை புதிய பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் விரைவில் அந்த பட்டியல்களை அடுத்தடுத்து வெளியிட்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 11ம் தேதி சென்னையில் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்ட ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதே நேரத்தில் ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதோடு, 4 மாதங்களில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக மோதல்
இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகள் அதிமுகவில் நாளுக்கு நாள் அரங்கேறி வரும் நிலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு அடுத்த நாள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகளில் தானே தொடர்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் ஓபிஎஸ். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் துணைப் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு நத்தம் விஸ்வநாதன் கேபி முனுசாமி ஆகியோரை நியமித்தார் எடப்பாடி.

புதிய நிர்வாகிகள் பட்டியல்
அடுத்தடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமியும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதாக ஓபிஎஸ்-ம் அறிக்கை வெளியிட்டு வந்தனர். தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், சட்டமன்ற சபாநாயகர் , மக்களவை சபாநாயகர் என அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் விசாரணையில் நிலுவையில் இருக்கும் நிலையில் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு வருகிறார் ஓபிஎஸ். அந்த வகையில் தலைமைக் கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

விரைவில் வெளியீடு
தற்போது சில மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் மீதமுள்ள 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒன்றிய செயலாளர், கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கிளைக் கழகப் பிரதிநிதிகள் தொடங்கி கட்சியின் உறுப்பினர்ட் தவிர அனைத்து பதவிகளுக்கும் ஓபிஎஸ் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கிறார்.

எதற்காக ஏற்பாடு
இது மட்டுமல்லாமல் அதிமுகவில் உள்ள இளைஞர் இளம்பெண்கள் பாசறை, எம்ஜிஆர் இளைஞர் அணி, புரட்சித்தலைவி அம்மா பேரவை, அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு, கழக இலக்கிய அணி, சிறுபான்மை பிரிவு, எம்ஜிஆர் மன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் தலைமை கழக நிர்வாகிகள் அதாவது மாநில செயலாளர் தொடங்கி கிளைக் கழக பிரதிநிதிகள் வரையிலான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இணையாக மாவட்ட செயலாளர்கள் பலம் தன்னிடம் இருக்கிறது என தேர்தல் ஆணையத்தில் முறையிடும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications