’கண்ணுல பயத்த பார்த்துட்டேன்’ குஷியான ஓபிஎஸ்..! இனிதான் என்ன பத்தி தெரியும்? ‘லோக்கல்’ கை மூலம் சவால்!
சென்னை : சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கைகோர்த்தால் மேலும் பலர் ஓபிஎஸ் தரப்புக்கு தாவ வாய்ப்பிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி சற்றே கலக்கத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கலக்கத்தில் இருப்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஏக குஷியில் இருக்கிறார்
தற்போதைய நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதில் பழனிசாமிக்கு 99% மாவட்ட தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் பழனிசாமிக்கு ஆதரவாகப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுகவில் குழப்பம்
இதேபோல அதிமுகவில் ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என விவாதம் நீடித்து வரும் நிலையில் அக்கட்சியில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் எம்எல்ஏ, இரட்டை தலைமைக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அவரது சொந்த மாவட்டமான தஞ்சை மாவட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை ஏற்று கட்சியை வழி நடத்த முன்வர வேண்டும் என மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தொண்டர்கள் ஆதரவு
இதற்குப் பின்னணி குறித்து ஆராய்ந்த போதுதான் பல ருசிகர தகவல்கள் வெளிவந்தன. தென் மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகளையும் தொண்டர்கள் பலரையும் சொந்த செலவில் சென்னை வரவழைத்து தங்க வைத்துள்ள ஓபிஎஸ் தரப்பு அவரது வீட்டு முன் கட்சி அலுவலகத்தின் முன்பு நூற்றுக்கணக்கானோரை குவித்துள்ளனர். இதன் மூலம் தொண்டர்கள் ஆதரவு தனக்குத்தான் என்ற தோற்றத்தை உருவாக்க முயன்று வருகின்றனர்.

இபிஎஸ் தரப்பு திட்டம்
இந்நிலையில்தான் தஞ்சையில் வைத்தியலிங்கம், தேனியில் ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளை கண்டறிந்து அவர்கள் மூலம் போஸ்டர் ஒட்டினால் சொந்த ஊரிலேயே நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கலாம் என இபிஎஸ் தரப்பு திட்டமிட்டு இருக்கிறது அதன் காரணமாகவே இன்றும் பல இடங்களில் போஸ்டர்கள் உள்ளதாக கூறுகின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள். 'உள்ளூர் பிரமுகர்கள்' தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது என்னவோ உண்மைதான்.

ஓ.பன்னீர்செல்வம் மகிழ்ச்சி
இதனிடையே சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கைகோர்த்தால் மேலும் பலர் ஓபிஎஸ் தரப்புக்கு தாவ வாய்ப்பிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி சற்றே கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது ஆதரவு நிர்வாகிகளிடம் தனது கவலையை அவர் கூறியுள்ளார். அவருடன் நீண்ட காலமாக பயணிக்கும் "மணியான" நிர்வாகிகள், எதற்கும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என உறுதி அளித்தனர். இதனால் அவர் சற்றே நிம்மதி அடைந்து உள்ளார்.
Recommended Video

கசியும் தகவல்கள்
ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து தங்கள் முகாமுக்கு வந்து உள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்புக்கு சாயலாம் என்பதனையும் மனதில் வைத்தே காய்களை நகர்த்தி வருகிறார் எடப்பாடி. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கலக்கத்தில் இருப்பதை உணர்ந்த ஓ பன்னீர்செல்வம் ஏக குஷியில் இருக்கிறார். அதை அப்படியே மெயின்டெய்ன் செய்யும் வகையில் சசிகலாவை சந்திக்கப்போவதாக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications