மீண்டும் குடைச்சல்.. லெட்டரை வைத்தே எடப்பாடிக்கு தண்ணி காட்டும் ஓபிஎஸ்.. அப்போ ஈபிஎஸ் திட்டமெல்லாம்?
சென்னை : அதிமுக பொதுக்குழுவுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில், பொதுக்குழுவுக்கான அழைப்புக் கடிதத்தை வைத்தே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தனது அடுத்த மூவை நகர்த்தியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
ஒருபக்கம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி வரும் நிலையில், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது எடப்பாடி பழனிசாமி டீம்.
பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட நிலையில், 15 நாட்களுக்கு முன்பே பொதுக்குழு நோட்டீஸ் வழங்கவில்லை எனக் கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஓ.பி.எஸ்.
அதிமுக பொதுக்குழு..! நீதிமன்ற படிக்கட்டேறிய ஓபிஎஸ்! முறையீட்டை ஏற்ற நீதிபதி..! நாளையே விசாரணை!
ஓபிஎஸ்ஸூக்கு அழைப்பு
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடித்துவரும் நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணிகள் முடிவடைந்துள்ளன. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதத்தில் தலைமை நிலைய செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தற்போது பொருளாளர் பதவியில் இருப்பதால் அவருக்கும் பொதுக்குழு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஓ பன்னீர்செல்வம் மனு
இதற்கிடையே, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தனர். எனினும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழை தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் அனுப்பி, கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்த ஈபிஎஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
15 நாட்களுக்கு முன்பே
இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வரும் 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறவுள்ளதாக நேற்று மாலை தான் தங்களுக்கு நோட்டீஸ் வந்ததாக குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ் தரப்பு, பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை விசாரணை
உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக் குழுவை தடை விதிக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நாளை இந்த வழக்கை விசாரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.
எடப்பாடிக்கு மீண்டும் செக்
எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்தவிருக்கும் பொதுக்குழுவை எப்படியும் தடுத்தே தீருவது என கங்கணம் கட்டிச் செயல்பட்டு வருகிறது ஓபிஎஸ் தரப்பு. எந்தெந்த வகையில் எல்லாம் எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்க முடியுமோ அப்படி எல்லாம் சிக்கல் கொடுத்து வருகிறார் ஓபிஎஸ். அந்த அடிப்படையில் தான், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு நோட்டீஸ் பொதுக்குழு நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பே விடுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையைக் கையில் எடுத்து கோர்ட்டை அணுகியுள்ளார் ஓபிஎஸ்.
ஏற்பாடுகள் தயார்
ஜூலை 11ஆம் தேதி மீண்டும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டத்தில் பொதுக்குழுவை நடத்த ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிப்பது குறித்த தீர்மானம் இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பு இந்த பொதுக்குழுவிலேயே எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராகவும் நியமிக்க ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்துள்ளது.
Recommended Video
குடைச்சல் கொடுக்கும் ஓபிஎஸ்
கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவதற்கான தீர்மானத்தை கொண்டு வர முடியாமல் ஓபிஎஸ் தடை பெற்றதால், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முயற்சித்தது எடப்பாடி தரப்பு. அதற்கும், பொதுக்குழு அழைப்பைக் காரணம் காட்டி குறுக்கே புகுந்துள்ளார் ஓபிஎஸ். நாளை நடைபெறும் விசாரணையில்தான் யார் கை ஓங்கும் என்பது தெரியவரும்.