’கொடநாடு’ தெய்வம் குடியிருந்த கோயில்! உண்மை ஒருநாள் வெல்லும்! உறுதியாய் நிற்கும் ‘வாரிசு’ ஜெயபிரதீப்
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் நெருக்கடி கொடுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொடநாடு கொலை வழக்கை கையில் எடுத்துள்ளது ஓபிஎஸ் தரப்பு. இது தொடர்பாக இன்றும் இரண்டாவது நாளாக ஓபிஎஸ்ஸின் மகன் ஜெயப்பிரதீப் நீண்ட விளக்கம் ஒன்றுடன் கோரிக்கை ஒன்றினையும் தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக மோதல் ஏற்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுகவில் இரு துருவங்களாக செயல்பட்டு வருவது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிலைய நிர்வாகிகள், சார்பு அணிநிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கே இருப்பதால் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக பதவியேற்க எடப்பாடி பழனிச்சாமி தயாராகி வருகிறார்.

ஒற்றைத் தலைமை விவகாரம்
கிட்டத்தட்ட அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ள நிலையில் திடீரென கொடநாடு கொலை வழக்கு தொடர்பான விவகாரங்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருதுஅழகராஜ் தொடர் கோரிக்கைகள் வைத்து வரும் நிலையில் நேற்று இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெய பிரதீப் முகநூல் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கொடநாடு கொலை கொள்ளை
இந்நிலையில் இன்றும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக நீண்ட விளக்கம் ஒன்றினை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"உண்மை ஒருநாள் வெல்லும், கொடநாடு சம்பவம் பற்றி நான்கு வருடமாக நான் எதுவும் பேசவில்லை என்று சில நண்பர்கள் கூறியிருக்கிறார்கள் அவர்களுக்கு தகுந்த விளக்கத்தினை நான் கூற கடமைப்பட்டிருக்கிறேன். எங்களது தெய்வம் குடியிருந்த கோயிலான பங்களாவில் சம்பவம் நடந்த ஆண்டு அதிமுக ஆட்சி புரிந்து கொண்டிருந்தது மூன்று ஆண்டுகள் நல்லதொரு தீர்ப்பு வரும் என்று பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன் .

ஜெயபிரதீப் கோரிக்கை
அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது அடுத்த அரசாங்கம் இந்த வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைதியாக காத்துக் கொண்டிருந்தேன். இரண்டு தினம் முன்பு தனியார் தொலைக்காட்சியில் நடந்த கொடநாடு சம்பவத்தைப் பற்றிய தொகுப்பை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. நேற்றைய என்னுடைய பதிவில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. மற்றவர்கள் மீது சந்தேகப்படுவதற்கு நான் காவல்துறையும் இல்லை பத்திரிக்கையாளரும் இல்லை சாதாரண மக்களின் ஒருவன் .

முற்றுப்புள்ளி வேண்டும்
ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது தாய் வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது இதற்கு நியாயம் கேட்க எங்கள் அம்மாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது. இந்த கொடநாடு சம்பவத்தை காலதாமதம் செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது. நமது கட்சிக்கு மேலும் கலங்கப்படுத்தாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் . இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கழக உண்மை தொண்டனின் எண்ணத்தை தான் நான் பதிவிட்டு இருந்தேன். " என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications