அம்மாடியோவ்..விண்ணை முட்டும் டிக்கெட் விலை..தீபாவளிக்கு தீயாய் உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணங்கள்
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 40 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல நினைத்தவர்கள் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் நடைபெறும் கட்டணக்கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எந்த பண்டிகை என்றாலும் அதை சொந்த ஊரில் உறவினர்களுடன் கொண்டாட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். வேலைக்காகவும் படிக்கவும் வெளியூர் சென்றவர்கள் சில நாட்கள் விடுமுறை கிடைத்தாலே அடித்து பிடித்து பஸ், ரயிலில் கிளம்பி சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.
ரயிலில் முன்பதிவு முடிந்து விட்டால் பலருக்கும் ஆபத்பாந்தவனாக இருப்பது பேருந்துகள்தான். அரசு பேருந்துகளில் செல்ல விரும்பாதவர்கள் நாடுவது தனியார் பேருந்துகளைத்தான். மக்களின் தேவைகளைத் தெரிந்து கொண்டு பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விடும்.

தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ரயில்களில் செல்ல 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு முடிந்து விட்டது. சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் செல்லலாம் என்று நினைத்து முன்பதிவு செய்யப்போனவர்களுக்கு மயக்கம் வராத குறைதான்.

கட்டணம் எவ்வளவு
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்குள் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தீபாவளிக்காக ரூ.2000 முதல் ரூ.3,100 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கோவைக்கு ரூ.2500 முதல், அதிகபட்சமாக ரூ.3,200 வரை தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
திருநெல்வேலிக்கு ரூ.3000 முதல் அதிகபட்சமாக ரூ.4000 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் விடுமுறை காலங்களில் தொடர்ந்து கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆய்வு செய்ய குழுக்கள்
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை தொடர் விடுமுறை நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் முன்னிலையில் இணை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டன.

அரசு நடவடிக்கை பாயுமா?
இது குறித்து கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்தை பொறுத்தவரை விமானம், ரயிலைபோல ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் கட்டணம் கூடுதலாக வசூலிக்கிறார்கள். அரசு தொடர் நடவடிக்கை மூலம் இதை கட்டுப்படுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனியார் பேருந்துகள் கட்டணக்கொள்ளையில் இறங்கியுள்ளன. ஆயுத பூஜை, தீபாவளி என தொடர் விடுமுறை மற்றும் விழா காலம் வருவதற்குள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். நடவடிக்கை பாயுமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications