கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் 128வது பிறந்தநாள்! நினைவிடத்தில் மலர்போர்வை அணிவித்த ஸ்டாலின்!
சென்னை: கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் சாஹிப்பின் 128வது பிறந்தநாளை ஒட்டி சென்னை வாலாஜா சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிறுபான்மைச் சமுதாயத்தினரின் உரிமைகளுக்காக உரக்கக் குரல் எழுப்பிய அரிமா காயிதே மில்லத் என ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இதனிடையே காயிதே மில்லத் நினைவிடத்தில் நடைபெற்ற சிறப்பு துஆ நிகழ்விலும் முதல்வர் பங்கேற்றார்.

ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி அன்று காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதை தனது வழக்கமாக கொண்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதே போல் கருணாநிதி உயிருடன் இருந்தபோது ஆக்டிவாக இருந்த வரை ஜூன் 5ஆம் தேதி அன்று காயிதே மில்லத் நினைவிடம் செல்ல தவறமாட்டார்.
கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
கல்லூரிப் படிப்பைக் கைவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைசிறந்த நாட்டுப்பற்றாளர். ஆட்சிமொழிப் பிரச்சினையில், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என அரசியல் நிர்ணய அவையில் ஆணித்தரமாக வாதாடிய மொழிக்காவலர்.

போட்டியிடும் தொகுதிக்குச் செல்லாமலேயே போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெறக் கூடிய அளவுக்குச் செல்வாக்கு கொண்டிருந்த தனிப்பெரும் தலைவர் காயிதே மில்லத். அரசியல் நிர்ணய அவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழர்களுக்காகவும் சிறுபான்மைச் சமுதாயத்தினரின் உரிமைகளுக்காகவும் உரக்கக் குரல் எழுப்பிய அரிமா.
"இவ்வளவு பெரிய முஸ்லிம் சமுதாயத்திற்கு இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது" என்று அவரது மறைவின்போது தந்தை பெரியாரால் உருக்கத்துடன் பாராட்டப்பட்ட மாசற்ற மாணிக்கம் - கண்ணியமிகு 'காயிதே மில்லத்' முகம்மது இஸ்மாயில் அவர்களின் பிறந்தநாளில் இந்நாட்டுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.












Click it and Unblock the Notifications