ஓணம் பண்டிகை.. மலையாளத்தில் பேசி கேரள மக்களுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் மு.க ஸ்டாலின்
சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மலையாள மொழியில் பேசி தனது வாழ்த்துக்களை முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம்.

அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்தப்பூ கோலம் போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள். கேரளாவில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஓணம் பண்டிகை கேரளாவில் களை கட்டியுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டிலும் சென்ன , கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மலையாளத்தில் பேசி தனது வாழ்த்தை முதல்வர் மு.க ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். மு.க ஸ்டாலின் வெளியிட்ட ஓணம் வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது:- பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக மாறி அனைவரையும் நாம் சமமாகப் பார்ப்போம். மகிழ்ச்சி நிறைந்த ஓணம் வாழ்த்துக்கள்" என மலையாள மொழியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications