கனமழை: விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தேனியில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக இன்று விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை பெரிதாக மழை இல்லை. மேகமூட்டமாகவே காட்சி அளிக்கிறது.

திடீர் கனமழை
தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் நேற்று திடீரென சில பகுதிகளில் கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. அதேபோன்று மதுரையில் இரவு திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பனிப்பொழிவும் இருந்தது. இதனால், மழை எங்கே பெய்யப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆச்சர்யம் கொடுக்கும் வகையில் இரவு 8 மணி அளவில் பலத்த மழை பெய்தது.

மதுரையில் கனமழை
அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இந்த எதிர்பாராத மழையால் மக்கள் சற்று சிரமம் அடைந்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோரிப்பாளம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேல் கனமழை கொட்டியதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது.

போக்குவரத்து பாதிப்பு
மழையின் காரணமாக நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் மின்சாரமும் தடைபட்டது. கனமழையால் சில இடங்களில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமம் அடைந்தனர். அதேபோல், அண்டை மாவட்டங்களாக விருதுநகர், தேனியிலும் இரவு நல்ல மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

விருதுநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக விருதுநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். அதேபோல், தேனி மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதில் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும்
இதேபோல் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்று இரவு தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் வரும் 1 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications