கரம் கோர்த்த அதிமுக.. நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவிற்கு ஆதரவு- எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
Recommended Video
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் 4-வது நாளாக அதிகரிக்கும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் பாதிப்பு அதிவேகம்.. என்ன காரணம்?
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசும் சரி , உச்சநீதிமன்றமும் முன்வராததால் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள் இட ஒதுக்கீட்டை எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தார்.
முழுமையாக விலக்கு கேட்கும் திமுக
இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. அதேநேரம் முழுமையாக நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது திமுக அரசின் நோக்கமாக இருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் போதும் இதை முன்வைத்து ஸ்டாலின் பிரச்சாரங்கள் செய்து வந்தார். உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரம் செய்தார்.
நீட் சட்ட மசோதா
இதன் ஒரு பகுதியாக நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில்தான் அவையிலிருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நீட் நுழைவுத்தேர்வை எதிர்ப்பதாக அதிமுக கூறிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிமுக வெளிநடப்பு
நீட் தேர்வுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், கூட்டணிக் கட்சியான பாஜக நிலைப்பாட்டை ஆதரிக்கும் விதமாகவும் அதிமுக வெளிநடப்பு செய்து விட்டது என்று திமுகவை சேர்ந்த பல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அதேநேரம் வெளிநடப்பு செய்த பிறகு சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் நுழைவுத்தேர்வுக்கு தங்கள் ஆதரவு இல்லை என்பதை தெளிவுபடுத்தினார்.
ஏன் வெளிநடப்பு
மாணவர் தனுஷ் என்பவர் நீட் நுழைவுத்தேர்வு அச்சம் காரணமாக நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் பேசுவதற்கு அனுமதி கேட்டதாகவும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். எனவே நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவுக்கு அதிமுகவும் ஆதரவு அளித்து அதை சட்டசபையில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது .
அதிமுக ஆதரவு
சட்டசபையில் நடப்பு கூட்டத்தொடரில் இன்று கடைசி வேலை நாள் என்பதால் இன்று மாலைக்குள் சட்ட மசோதா நிறைவேற்றப்படும். பாஜக தவிர அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு அளிக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஆளும் திமுக அரசு கொண்டு வந்த இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சட்ட மசோதா மதிப்பு
ஆளுங்கட்சியினர் மட்டுமல்லாது, பிரதான எதிர்க்கட்சியும் ஒரு சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் போது, அதன் மதிப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கும். அந்தவகையில் நீட் நுழைவுத்தேர்வு எதிரான சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்திருப்பது, மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் திரண்டு இருப்பதற்கான சமிக்ஞையை கொண்டு செல்லும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.