எங்கே பார்த்தாலும் வெடிகுண்டு! எங்க ஆட்சியில் போலீஸ் எப்படி இருந்தாங்க? எடப்பாடிக்கு வந்ததே கோபம்!
சென்னை : எங்களது ஆட்சியில் சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட்ட காவல் துறை தற்போது செயலற்று உள்ளது. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தைத் தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலணாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், சில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதற்கு பிஎஃப்ஐ கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது.
இந்நிலையில் அதற்கு அடுத்த நாள் கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
90’ஸ் கிட்ஸ் தான் குறி! 6 பேரை கவிழ்த்த 'கல்யாண ராணி’! இன்னும் 4 குரூப்.. அதிர வைத்த வாக்குமூலம்!
பெட்ரோல் குண்டு
பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீசியதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முகமது ரபீக், மாலிக் என்ற சாதிக் பாஷா, ரமீஷ்ராஜா ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தென்காசியில் ஒருவரும், திண்டுக்கல்லில் சிக்கந்தர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய போலீசார் திவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில்,"எங்களது ஆட்சியில் சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட்ட காவல் துறை தற்போது செயலற்று உள்ளது. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தைத் தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது;
தமிழகக் காவல் துறை
சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழகக் காவல் துறை சட்டப்படி, நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர்; மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவின் ஆட்சியில் இருந்த நிலை. ஆனால், இந்த விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் சர்வ சாதாரணமாக தினசரி நடைபெறுகின்றன. குற்றவாளிகள் அச்சமின்றி சுதந்திரமாக ஆயுதங்களுடன் நடமாடி வரும் நிகழ்வுகள் அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வெளிவருகின்றன.
அச்சத்துடன் மக்கள்
இதுபோன்ற நிகழ்வுகளினால், மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்கின்றனர். குறிப்பாக, பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். கடந்த வாரத்தில், கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் போன்று, வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது. எங்களது ஆட்சியில் சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட்ட காவல் துறை தற்போது செயலற்று உள்ளது.
வெடிகுண்டு கலாச்சாரம்
இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல். மாய உலகம் ஒன்றில் வாழும் ஒரு நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை தமிழகம் பெற்றுள்ளது வேதனைக்குறியது. எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. தனி மனிதரின் உயிருக்கும். உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஆளும் திமுக-வினர் உருவாக்கி வருகின்றனர். இது, அமைதியான தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தான போக்காகும். இனியாவது இந்த விடியா திமுக அரசு, வெடிகுண்டு கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தி, தமிழக மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.