‘சிக்னல்’ கொடுத்த ஓபிஎஸ்! கட்சி ஒற்றுமையே பெரிது.. தனிப்பட்ட ஆள் அல்ல! தலைமை அலுவலகத்தை வைத்து மூவ்!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அறைகளுக்கு மறைந்த முதலமைச்சர் ஜானகி மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் சூட்டப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஜூலை 11ஆம் தேதி நடந்த வன்முறைச் சம்பவத்தால் அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற பிறகு, அலுவலகத்திற்கு ஓபிஎஸ் தரப்பு செல்லவில்லை.
இந்நிலையில் தான் ஜானகி அம்மையார் பிறந்தநாளையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள முக்கிய பிரமுகர் அறைக்கு, அந்த அலுவலக இடத்தை வழங்கிய ஜானகி அம்மையாரின் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார் ஓபிஎஸ்.
பேராசிரியர் அன்பழகனுக்கு பெருமை சேர்த்த ஸ்டாலின்! பள்ளிக்கல்வித் துறை வளாகத்துக்கு புதிய பெயர்!
ஜானகி அணி ஓபிஎஸ்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, அதிமுகவுக்காக வழங்கினார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணி, ஜானகி ராமச்சந்திரன் அணி என இரண்டாகப் பிரிந்து அதிமுக இருந்த நிலையில் ஜானகி அணியில் இருந்தவர் ஓபிஎஸ். ஜெ அணியில் இருந்தவர் ஈபிஎஸ். இன்று இருவரும் தனித்தனியாகப் பிரிந்து மோதி வருகின்றனர். இந்நிலையில் ஜானகி அம்மையாரின் 100வது பிறந்தநாளையொட்டி, அதிமுக தலைமை அலுவலக கூட்ட அரங்கிற்கு, ஜானகி அம்மையாரின் பெயர் சூட்டப்படும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
ஒற்றுமையே முக்கியம்
அதிமுக தலைமை அலுவலகமே தனது கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில், விரைவில் ஜானகியின் பெயர் சூட்டப்படும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளதும், அதுதொடர்பான அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சின்னம் முடக்கப்பட்டு, எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் பிரிந்து கிடப்பதை விரும்பாமல் கட்சியின் ஒற்றுமைதான் முக்கியம் என்ற பொது நோக்கோடு, சின்னத்தையும், அலுவலகத்தையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்ற தலைவி என ஜானகி அம்மையாரின் புகழ் பாடியுள்ளார் ஓபிஎஸ். இதன் மூலம் ஒற்றுமையை மீண்டும் ஓபிஎஸ் வலியுறுத்துவதாகத் தெரிகிறது.
ஜானகி - நூறாவது பிறந்த நாள்
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மறைந்த வி.என். ஜானகி அம்மையார் அவர்களின் 100-வது பிறந்தநாள் விழா தொடக்கத்தினையொட்டி அவருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என் வணக்கத்திளையும், மரியாதையையும் முதற்கன் தெரிவித்துக் கொள்கிறேன். "ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்" என்று சொல்வார்கள். இதனை நிரூபித்துக் காட்டியவர் ஜானகி அம்மையார்.
வள்ளல் ஜானகி
எம்.ஜி.ஆர் நோய்வாய்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையிலும், அமெரிக்காயில் உள்ள புருக்லின் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டபோதும் சரி, அதற்குப் பின்னாலும் சரி அவருடனேயே இருந்து அவரை கண் இமை போல் காத்த பெருமைக்குரியவர் ஜானகி அம்மையார். தமிழக மக்களின் நலன்களுக்காக அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை எம்.ஜி.ஆர் ஆரம்பித்தபோது, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை கட்சிக்காக கொடுத்த வள்ளல் ஜானகி அம்மையார். இந்த இடத்தில்தான், அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைமைக் கழகம் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை" என்ற பெயரில் இன்றளவிலும் செயல்பட்டு வருகிறது.
கட்சிதான் பெரிது
எம்.ஜி.ஆர் மறைவிற்கு முன்பே, 29-07-1987 அன்று அந்தக் கட்டடத்தை அதிமுக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரில் பத்திரப் பதிவு செய்த பெருமைக்குரியவர் ஜானகி அப்மையார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவிற்குப் பிறகு, அதிமுக இரு பிரிவுகளாக செயல்பட்டதன் காரணமாக, எம்.ஜி.ஆர் கண்டெடுத்த வெற்றி சின்னமாம் "இரட்டை இலை" சின்னம் முடக்கப்பட்டது. இருப்பினும், 1989 ஆம் ஆண்டைய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலுக்குப் பின், "தனிப்பட்ட ஆள் எவ்வளவுதான் அறிஞராக இருந்தாலும், வீரராக இருந்தாலும் கட்சி பெரிதே தவிர தனிப்பட்ட ஆளல்ல" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, "கட்சிதான் பெரிது" என்ற அடிப்படையில் செயல்பட்டார்.
ஜானகி செய்த தியாகம்
எம்.ஜி.ஆர் தோற்றுவித்த கட்சி தொடர்ந்து மக்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும், எம்.ஜி.ஆரின் நொண்டர்கள் ஓரணியில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், கட்சியையும், கட்சி அலுவலகத்தையும், சின்னத்தையும் "வெற்றி வீராங்கனை" ஜெயலலிதா அவர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டு சென்ற பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் ஜானகி அம்மையார். கட்சியின் ஒற்றுமைதான் முக்கியம் என்ற பொது நோக்கோடு செயல்பட்ட ஜானகி அம்மையாரின் புகழ், அவர் செய்த தியாகம் என்றென்றும் அனைவர் உள்ளங்களிலும், குறிப்பாக அதிமுக தொண்டர்களின் உள்ளங்களில் நிலைத்து நிற்கும்.
ஜானகி பெயர் சூட்டப்படும்
எம்.ஜி.ஆர். மாளிகையில் தரை தளத்தில் உள்ள முக்கியப் பிரமுகர் அறைக்கு வி.என். ஜானகி அம்மையார் பெயர் சூட்டப்பட வேண்டுமென்றும், முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கிற்கு புரட்சித் தலைவி அம்மா பெயர் சூட்டப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் கழகத் தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என்னிடம் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர் - ஜானகி சிலைகள்
மேலும், சென்னை, தியாகராய நகர், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், உரிய அனுமதி பெற்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி வி.என்.ஜானகி அம்மையார் ஆகியோருக்கு முழு உருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையின் மூலம் ஜானகி அம்மையார் பிறந்தநாள் நூற்றாண்டை சிறப்பாக முன்னெடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.