ஓபிஎஸ்-க்கு இந்த ஒரே சாய்ஸ்தான்.. இதை விட்டால் வேற வழியில்லை.. பரபரப்பை கிளப்பும் தராசு ஷ்யாம்
ஓபிஎஸ் இதே பொறுப்பில் நீடிப்பதுதான் ஒரே வழி என்று தராசு ஷ்யாம் கூறியுள்ளார்
சென்னை: "கட்சியிலே முழு பொறுப்பையும் ஒருவரிடம் தந்தால், கட்சியே அவரிடத்தில் முழுமையாக போய் சேர்ந்து விடும்.. அந்த அரசியல் ஆபத்துக்கு எந்த முதலமைச்சரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.. ஆக, ஓபிஎஸ் அவர்களுக்கு ஒரே வாய்ப்புதான்.. இருக்கிற நிலையை அப்படியே ஒத்துக் கொண்டு தொடர்வது, அல்லது கட்சியை விட்டு வெளியேறுவது" என்று
விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. முதல்வர் வேட்பாளரை உடனடியாக அறிவித்து தேர்தலை சந்திக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யலாம் என துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்பும் வலியுறுத்தி வருகின்றன.
இது சம்பந்தமான ஆலோசனையும் இரு தரப்பிலும் நடந்து வருகின்றன.. இவர்கள் இருவரையும் அமைச்சர்கள் இப்படி மாறி மாறி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.. இதனால் சில தினங்களாகவே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது... இன்றும் ஆலோசனை நடந்து வருகிறது.
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அவசரம் காட்டுகிறதா அதிமுக.. திடீரென இந்த குழப்பம் ஏன்?
கருத்து
இப்படிப்பட்ட சூழலில், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான தராசு ஷ்யாம் ஒரு பிரபல டிவி சேனலுக்கு இது சம்பந்தமாக கருத்து சொல்லி உள்ளார்.. அதில் அவர் சொன்னதாவது: இது சம்பந்தமாக, இந்த விவகாரம் பெரிதாக எழ வாய்ப்பே இல்லை.. ஏனென்றால் ஆட்சி முடிய இன்னும் 6,7 மாசம் இருக்கு அதுவரை நடப்பு முதல்வர்தான் முதல்வர் வேட்பாளர்... அதில் மாற்று கருத்தும், ஐயமும் இல்லை.
யார் பொறுப்பு?
ஆனால், உண்மையிலேயே நடக்கும் பிரச்சனை என்னவென்றால், கட்சிக்கு யார் பொறுப்பு என்பதுதான்.. இப்படித்தான் இதை உணர்கிறேன். இதுவரைக்கும் இருவரும் சேர்ந்துதான் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார்கள்.. இப்போது பொதுச்செயலாளர் மாதிரி கட்சி, தன் கைக்கு வர வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்கிறார்.. அதற்கு ஒரு முன்னோட்டமாகத்தான் இந்த உயர்மட்ட குழுபிரச்சனையை எழுப்புகிறார்..
வழிகாட்டு குழு
ஏனென்றால், இந்த வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்பது 2017 தீர்மானத்தின் ஒரு பகுதி.. மூன்று வருடமாகிவிட்டது அந்த தீர்மானத்தை போட்டு.. இதுவரைக்கும் அந்த பிரச்சனையை அவர் பெரிதாக எழுப்பவில்லை.. அவ்வப்போது வந்து அதற்கான குரலை கொடுப்பார், பிறகு அமைதியாகி விடுவார்.. ஆனால், இப்போது அந்த நிலைப்பாட்டிலே உறுதியாக இருக்கிறார்.
பவர் சென்ட்டர்
ஏனென்றால், அந்த நிலைப்பாடு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஒத்துவராத நிலைப்பாடு.. இன்னொரு பவர் சென்ட்டரைதான் அது உருவாக்கும்.. ஏற்கனவே கட்சியில் இணை, துணை உறுப்பாளர்கள் என்று ஏறக்குறைய 100 பேர் இருக்கிறார்கள்.. எனவே இப்போதைய நிலையே தொடர வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணம்.. அது அரசியல் ரீதியாக சரியானதும்கூட.
கட்சி பொறுப்பு
ஆனால், ஓபிஎஸ் தன் நிலைப்பாடாக உறுதியாக வைக்கிறார்.. இதில் ஒரு சமரசம் வேண்டும் என்றால், கட்சி பொறுப்பு முழுமையாக தன்னிடம் வர வேண்டும் என்பது அவரது நிலை.. ஆனால் கட்சி பொறுப்பை இப்படி முழுமையாக கொடுக்க மாட்டார்கள்.. 1996 காலகட்டத்திலேயே, ஜெயலலிதா அவர்களே ஒரு தொகுதியில் தோற்கும்போது, திரு முத்துசாமி, திரு கண்ணப்பன், திரு அரங்கநாயகம் போன்றோர் கிட்டத்தட்ட இதே கோரிக்கையைதான் முன்வைத்து ஜெயலலிதாவிடம் போராடினார்கள்.
ஜெயலலிதா
அப்போது அவர்கள் அதிமுகவில் இருந்தார்கள்.. அதிமுகவின் கட்சி பொறுப்புகளை கவனிக்க ஒரு குழு என்றுதான் அந்த கோரிக்கை முதலில் எழுந்தது.. ஆனால், அதற்கு ஜெயலலிதா அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.. இத்தனைக்கும் அவர் மீது ஏராளமான வழக்குகள், தேர்தல் தோல்வி என்றிருந்தபோதும், கட்சியை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை.. இதற்கு எந்த தலைவரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.. காரணம், கட்சி என்பது மிகவும் முக்கியமானது.
ஆபத்து
அடுத்ததாக, அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது.. ஏராளமான பேரூராட்சி பதவிகள், நகராட்சி பதவிகள், மாநகாட்சி பதவிகள் இவற்றுக்கெல்லாம் ஆட்களை நியமனம் செய்யும்போது, கட்சியிலே முழு பொறுப்பையும் ஒருவரிடம் தந்தால், கட்சியே அவரிடத்தில் முழுமையாக போய் சேர்ந்து விடும்.. அந்த அரசியல் ஆபத்துக்கு முதலமைச்சர் ஒத்துக் கொள்ள மாட்டார்.
ஆபத்தான முடிவு
அதனால்தான் இந்த ஆலோசனை கூட்டத்தில்கூட அதை பற்றியே பேசியிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆக, ஓபிஎஸ் அவர்களுக்கு ஒரே வாய்ப்புதான்.. இருக்கிற நிலையை அப்படியே ஒத்துக் கொண்டு தொடர்வது, அல்லது கட்சியை விட்டு வெளியேறுவது.. இதில் 2வது முடிவு மிகுந்த ஆபத்தானது.. அந்த முடிவை அவர் எடுப்பாரா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது" என்றார்.