‘அதையெல்லாம்’ கண்டுக்காதீங்க..எல்லாம் நன்மைக்கே! ஆதரவாளர்களுக்கு ஆறுதல் சொன்ன ஓபிஎஸ்! கலகல அதிமுக!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு கட்ட திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலை ஓபிஎஸ்ஐ பாஜக தலைமை கைவிட்டு விட்டதாக கூறப்பட்டாலும் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்க்கு மேலும் ஆதரவைத் திரட்டி வருவதோடு நிர்வாகிகள் நியமனத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரு அணிகளாக பிரிந்த அதிமுக மீண்டும் சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. அறிக்கை, ஆர்ப்பாட்டங்கள், பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் கைகோர்த்தனர்.
ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான்காண்டு காலம் சுமூகமாக சென்றது. சுமூகம் என்றால் வெளியில் தான் உள்ளே வழக்கம் போல உட்கட்சி பூசல்கள் இருந்து கொண்டு தான் இருந்தது.
பாஜக+அதிமுக கூட்டணி? நல்லாதான் இருக்கும்..படி தாண்டிய 'பத்தினி’ அவர்! செல்லூர் ராஜு காரசார விமர்சனம்
அதிமுக விவகாரம்
கட்சி நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுவது, ஆட்சியில் நிலைநிறுத்திக் கொண்டது போலவே கட்சியிலும் தனது செல்வாக்கை மறைமுகமாக வளர்த்தெடுப்பது என எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவை ஆக்கிரமிக்க தொடங்கினர். நாட்கள் செல்லச் செல்ல ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு வட்டம் வெகுவாக சரிந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்திலும் மோதல் வெடித்தது. அப்போதும் பாஜக தலைமை தலையிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்தது. தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராகவும் அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி ஏற்றுக்கொண்டார்.
ஓ.பன்னீர்செல்வம்
இப்படி நடந்தேற நிகழ்வுகளில் ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுத்ததற்கு பாஜக தலைமையே காரணம் எனவும் கூறப்படுகிறது. அதனை வெளிப்படையாகவும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். இந்த நிலையில் திடீரென அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்து நிலையில் பல மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பின்னால் திரண்டனர். அதே நேரத்தில் ஆரம்பத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 11 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருந்தது. அடுத்த அடுத்த நாட்களில் ஐந்தாக குறைந்த நிலையில் தற்போது தேனி திருச்சி கன்னியாகுமரி ராமநாதபுரம் திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆதரவு வட்டம் ஓரளவு இருக்கிறது.
புதிய நிர்வாகிகள்
மேலும் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருந்த அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து மாவட்ட செயலாளர் ஆகவும் தலைமைக்காக நிர்வாகிகளாகவும் நியமனம் செய்துள்ளார். இதை அடுத்து மாவட்ட செயலாளராக பதவி பெற்றவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்களை வளைத்து ஓபிஎஸ்-க்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேனியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நாள்தோறும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் வந்து சந்திப்பதும் அவர்களுக்கு புதிய பதவி அறிவிப்பது என கைலாசபட்டி பண்ணை வீடு களைகட்டி வருகிறது.
ஓபிஎஸ்-க்கு ஆதரவு வட்டம்
இதனுடைய உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி தீர்ப்பின் போது ஓபிஎஸ்-க்கு ஆதரவு வட்டம் அதிகரித்து நிலையில் உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகளின் தீர்ப்பால் அது சரிந்தது. தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கையே ஓங்கி இருக்கிறது. மேலும் பாஜக தலைமையும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரித்தது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரிய பின் விளைவாக கருதப்படுகிறது. இதனால் அவர் தரப்பு அதிருப்தியில் இருப்பதாகவும் டெல்லி தரப்பை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆதரவாளர்கள் உற்சாகம்
இந்த நிலையில் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்துங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்து இருக்கிறார்கள். தற்போதைய சூழலில் பல மாவட்டங்களில் கிளைக் கழக நிர்வாகிகள் தொடங்கி மாவட்ட நிர்வாகிகள் வரை நியமனம் நடைபெற்று அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
போட்டி பொதுக்குழு
ஜெயலலிதா நினைவு நாளின் போது இபிஎஸ் தரப்பு நினைவஞ்சலி கூட்டங்கள் நடத்தியது போல ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் என அவர்களும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் போட்டி போட்டு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தினர். தற்போதைய சூழ்நிலையில் பெரிய அளவில் முகம் தெரிந்த நிர்வாகிகள் இல்லாவிட்டாலும் கிளைக் கழகங்கள் தொடங்கி மாவட்ட நிர்வாகிகள் வரை இபிஎஸ் தரப்பால் புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து ஓரளவு தனது தரப்பை வலுப்படுத்தி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து சென்னை அல்லது மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
கடுகடுப்பில் இபிஎஸ்
தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் பலரும் போஸ்டர்கள் பேனர்கள் என தங்கள் பகுதிகளில் அதிமுகவுக்கு எதிராக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இது உள்ளூர் நிர்வாகிகளை கடுகடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் அதிமுக தரப்பில் நிர்வாகிகளை அழைத்து வந்து பொறுப்புகள் வாங்கித் தருகிறோம் என வலைவீசி வருகின்றனர். சிறு கிராமங்களாக இருந்தாலும் அங்கும் ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றது. அதிமுக இதனால் உற்சாகத்தில் இருக்கும் ஓபிஎஸ் தரப்பு அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்படி குடைச்சல் கொடுக்கலாம் என தீவிரமாக யோசித்து வருகிறது.