என்னை கூப்பிடாம அவரை ஏன் வர சொன்னீங்க.. கொந்தளித்த ஓபிஎஸ்.. டெல்லிக்கு கடிதம்.. ஷாக்கிங் ரியாக்ஷன்!
சென்னை : பாஜக மேலிடம், ஜி20 ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமியை மட்டும் அழைத்துவிட்டு, ஓபிஎஸ்ஸை அழைக்காதது அவரது தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், எந்த ரிப்ளையும் வராததால் ஓபிஎஸ் கடுமையாக அப்செட் ஆகியுள்ளாராம்.
பாஜக தலைமையோடு மிகவும் இணக்கமாகச் செயல்பட்டும், பாஜக தனது காலை வாரியதை ஓபிஎஸ்ஸால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம். இதனால் தான் உடனே, மனம் வெதும்பி டெல்லிக்கு கடிதம் எழுதினார்.
ஆனால், அந்தக் கடிதத்திற்கு பதில் கிடைக்காத நிலையில், பாஜக மேலிட தலைவர்களை தொடர்பு கொள்ள முயன்றும், அவர்கள் புறக்கணிப்பதால் ஷாக் ஆகியுள்ளாராம். பாஜகவின் இந்த ரியாக்ஷனை சற்றும் எதிர்பார்த்திராத ஓபிஎஸ் அப்செட்டில் ஆழ்ந்திருக்கிறாராம்.
அங்கே போட்ட அச்சாரம்.. எடப்பாடி 'கிரீன் சிக்னல்’.. உடனே ஓகே சொன்ன பாஜக! பின்னணி இதானா? அப்போ ஓபிஎஸ்?
ஓபிஎஸ் அதிர்ச்சி
ஜி 20 அமைப்பின் அடுத்த சர்வதேச மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜி 20 மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 40 கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்க அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் டெல்லி சென்று கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தலைமை எடப்பாடி
40 கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வுக்கு தலைமை யார் என்ற சர்ச்சை நீடித்து வரும் நிலையில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பாஜக மேலிடம் அங்கீகாரம்
மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு அழைப்புக் கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தை ஏற்று எடப்பாடி பழனிசாமி அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் அங்கீகரித்து இருப்பதாக கருதப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்து உள்ளது. அதேசமயம், ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அவசர கடிதம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலகாத் ஜோஷிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், அ.தி.மு.க தலைமைக்கு சட்ட ரீதியாக நான்தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இன்னமும் நான்தான் நீடிக்கிறேன். கடந்த டிசம்பர் மாதம் நடந்த கட்சி கூட்டத்தில் நான் போட்டியின்றி ஏக மனதாக அந்த பதவிக்கு தேர்வானேன். இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நான்தான் ஒருங்கிணைப்பாளர்
எனவே அ.தி.மு.க தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அதிமுகவுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுகவில் உள்ள சிலரது நடவடிக்கைகளால் கட்சி தலைமை தொடர்பாக சர்ச்சை உருவாகி உள்ளது. சிலர் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் (தற்காலிக) பதவிக்கு தேர்வு செய்து இருப்பதாக சொல்கிறார்கள். அ.தி.மு.கவின் சட்ட விதிகளுக்கு இது முழுக்க முழுக்க விரோதமானதாகும்.
இனி இப்படி செய்யாதீர்கள்
எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே எதிர்காலத்தில் இத்தகைய தவறு நடக்காமல் மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மனப்பூர்வமாக நான் நம்புகிறேன். மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை இனியும் மத்திய அரசு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
ஈபிஎஸ் - சிறிய அணி
அ.தி.மு.க தலைமை யார் என்பது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிவித்திருப்பது துரதிருஷ்டமாகும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு சிறிய அணிதான் இருக்கிறது. எனவே அவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பலன் இல்லை - அப்செட்
பாஜகவை பெரிதும் நம்பியிருந்த ஓ.பன்னீர்செல்வம், தன்னை மதிக்காமல் எடப்பாடியை ஏற்றுக்கொண்டு கடிதம் அனுப்பியதால் வெதும்பிப்போய் மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். ஆனால் அந்தக் கடிதத்தை மத்திய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. இது தொடர்பாக இதுவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் அனுப்பப்படவில்லை. பாஜக மேலிட தலைவர்களை ஓபிஎஸ் தொடர்பு கொள்ள முயற்சித்தும் எந்தப் பலனும் இல்லையாம். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக அப்செட் ஆகியுள்ளனர்.