‘அவங்க’ இப்போதைக்கு வேண்டாம்! பிரம்மாஸ்திரத்திற்கு ‘ரெஸ்ட்’ கொடுத்த ஓபிஎஸ்! களைகட்டும் கள அரசியல்!
சென்னை : தற்போதைய சூழ்நிலையில் தனக்கு சாதகமான நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறி வருவதால் உற்சாகத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனித்தே செயல்பட முடிவெடுத்துள்ள நிலையில், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் இணைந்து செயல்படும் முடிவை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் முதல் அதிமுகவில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அரசியல் நகர்வுகள் அடுத்தடுத்து பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. அனைத்திற்கு காரணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பற்ற வைத்த 'ஒற்றை தலைமை' எனும் நெருப்பு.
முதல் பொதுக்குழு கூட்டம் ரத்து, கட்சி அலுவலகத்தில் கலவரம், இரண்டாவது பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு என இரண்டே மாதத்தில் வரலாறு காணாத சண்டைகளையும் சச்சரவுகளையும் கண்டுள்ளது அதிமுக.

அதிமுக மோதல்
இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்ற கையோடு கட்சியில் தனது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காகவும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை கூண்டோடு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைஅடுத்து ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொது செயலாளர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் என்று பெயர் பெற்ற அதிமுக தற்போது குழாயடி சண்டை போல அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. இதனால் நடுநிலைத் தொண்டர்கள் பெரும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் வருகை அதிமுகவில் பெரும் முக்கியத்துவம் பெற்றது.

பிரதமர் மோடி
அதிமுகவை ஏற்கனவே பாஜக இயக்கி வருவதாக புகார் கூறுப்படும் நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆர்வம் காட்டினர். அதே நேரத்தில் இருவரையும் ஒன்றாக சந்திக்காத பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்த போது எடப்பாடி பழனிச்சாமியையும், அகமதாபாத் திரும்பும் போது ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்தார். பிரதமர் மோடியுடன் சந்திப்புக்கு பிறகு வழக்கமான உற்சாகம் எடப்பாடி பழனிச்சாமி முகத்தில் காணப்படவில்லை.

ஓபிஎஸ் உற்சாகம்
அதே நேரத்தில் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த ஓ.பன்னீர்செல்வம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என உற்சாக சிரிப்புடன் மாஸ் டயலாக் பேசிவிட்டு சென்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிமுகவில் இருந்துள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா வழக்கு ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை என அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது இபிஎஸ் தரப்புக்கு.

ஓபிஎஸ் தரப்பு உற்சாகம்
இதனால் ஓபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது. ஏற்கனவே தனது பக்கம் பலத்த பின்னடைவுகளை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தபோது அவர் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் கைகோர்த்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுகவில் புதிய அணியை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தங்களுக்கு சாதகமான நிகழ்வுகள் நடக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் பிசியாக உள்ளது ஓபிஎஸ் தரப்பு. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மேலிடத்தின் ஆதரவுடன் நெருக்கடி கொடுக்க தயாராகி வருகிறார். இதனால் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோரை சந்திக்கும் முயற்சிகள் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்கின்றனர் விவரம் அறிந்த தேனி அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications