ஒன்னும் இல்லை! பாஜக வேட்பாளர் அறிவித்துவிட்டால் எங்கள் வேட்பாளர் வாபஸ்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்கள் வேட்பாளர் வாபஸ்- ஓபிஎஸ்
சென்னை: பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டால், எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுவிடுவோம் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுகவின் எடப்பாடி அணி இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது.
அது போல் ஓபிஎஸ் தரப்போ பாஜக போட்டியிட்டால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக பணியாற்றுவோம் என கூறியிருந்தது. இந்த நிலையில் பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
ஈரோடு கிழக்கில் செந்தில்முருகன் போட்டி.. வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்.. கடைசியில் வைத்த ட்விஸ்ட்!
4 விதமான கருத்துகள்
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் 4 விதமான கருத்துகளை தெரிவித்திருந்தனர். அதாவது ஈரோடு தொகுதியில் போட்டியிடுவது, போட்டியிட வேண்டாம், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கொடுப்பது, எடப்பாடி தரப்புக்கு ஆதரவு கொடுப்பது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டன. ஆனால் இதில் இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. இறுதி முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கும் இரட்டை இலைக்கும்
இந்த நிலையில் பாஜகவுக்கும் இரட்டை இலை சின்னத்திற்கும் காத்திருக்க வேண்டாம் என கருதிய எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் திடீரென தங்கள் தரப்பு வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை அறிவித்தார். இதனால் ஓபிஎஸ் தரப்பு என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்தது.
புகழேந்தி பேட்டி
அந்த வகையில் இதுகுறித்து புகழேந்தி கூறுகையில் பாஜக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்போம் என்றார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேசிய தலைமையுடன் ஆலோசனை நடத்த மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
பசுமை வழிச்சாலையில் ஓபிஎஸ் பேட்டி
இந்த நிலையில் ஓபிஎஸ் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அறிமுகப்படுத்தினார். இந்த அறிமுகத்திற்கு செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இரட்டை இலை என்னவாகும்
அதில் அவர்கள் கேட்கையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்தியதால் இரட்டை இலை சின்னம் முடங்கும், வெற்றி வாய்ப்பும் பறி போகுமே என கேட்டனர். அதற்கு ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக நான் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன். கடந்த உள்ளாட்சி தேர்தலில் விண்ணப்பம் B-யில் கையெழுத்து வாங்க எடப்பாடி தரப்பை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் வந்தார்.
4 நாட்களில் முடிவு
அவர் கொடுத்த விண்ணப்பங்களில் நான் கையெழுத்திட்டு கொடுத்தேன். இதுகுறித்து 4 நாட்களில் முடிவு அறிவிப்பதாக சொன்னார்கள், நான் காத்திருந்தேன். ஆனாலும் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார்கள். எனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாததற்கு நான் எந்த வகையிலும் காரணம் அல்ல. ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த "இடைத்தேர்தலில் தென்னரசுவை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். எனவே ஒருங்கிணைப்பாளருக்கான கையெழுத்தை போடுங்கள்" என கேட்டு விண்ணப்பப் படிவத்தை கொடுத்தால் தாராளமாக கையெழுத்திட நான் ரெடி என்றார்.
அதிமுக தலைமையிலான கூட்டணி
மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணி என்பதால் பாஜகதானே இத்தனை தேர்தலில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் உங்களை அணுகியது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் நீங்கள் பாஜகவுக்காக காத்திருப்பது ஏன் என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ், தேசிய அளவில் பாஜகதான் தலைமை, தமிழக அளவில் அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை.
பாஜகவின் நிலைப்பாடு என்ன
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என கூறிவிட்டார்கள். அது போல் கூட்டணி கட்சியான பாஜகவின் நிலைப்பாட்டை அறிய காத்திருக்க வேண்டும். அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். தேசிய கட்சியை உடனே சொல்லுங்கள் என நிர்பந்திக்க முடியாது. அவர்கள் நிறைய பேரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். எனவே அவர்கள் நிலைப்பாட்டை சொல்லும் போது சொல்லட்டும்.
சுயேச்சை சின்னமும் ஓகே
ஒரு வேளை பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தால் எங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவோம். இல்லாவிட்டால் நாங்களும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தனி சின்னத்திலாவது போட்டியிடுவோம் என்றார்.