வெற்றி தோல்வி வீரனுக்கு சகஜம்! ஒரு மாசத்துல என்ன நடக்க போகுதுனு பாருங்க! கொந்தளித்த கோவை செல்வராஜ்!
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்திருக்கும் நிலையில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம் எனவும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் படி ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராக தொடர்வதாக அவர் தரப்பு ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். மேலும் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் எனவும் தீர்ப்பளித்தனர்.
இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கோவை செல்வராஜ்
இந்நிலையில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம் எனவும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் படி ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராக தொடர்வதாக அவர் தரப்பு ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறியுள்ளார். உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக பேசியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான கோவை செல்வராஜ் பேசுகையில்," தற்போது அதிமுக பொது குழு தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு குறித்து விமர்சனங்கள் எதுவும் இல்லை.

வெற்றி தோல்வி சகஜம்
அரசியலைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது சகஜம். அணிகள் இணைப்புக்கு பிறகு நடைபெற்ற பொதுக் குழுவில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானங்களின்படி தேர்தல் ஆணையத்தில் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராக ஓ பன்னீர்செல்வம் தான் இருக்கிறார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுக்கள் குறித்து எந்த விதமான முடிவுகளையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஓ.பன்னீர்செல்வம்
அதன்படி பார்க்கும்போது கட்சியின் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்கிறார் என்பதுதான் உண்மை. உயர் நீதிமன்ற தீர்ப்பு என்பது அரசியல் கட்சிகளின் விதிமுறைகளை தலையிடக்கூடாது. என்ன இருந்தாலும் ஓ பன்னீர்செல்வம் தான் அதிமுகவின் தலைவர். இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக ஓ பன்னீர் செல்வத்தின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வருவதை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் பார்ப்பார்கள். அதிமுகவையும், ஓபிஎஸ்ஸையும் யாராலும் தொட்டுப் பார்க்க கூட முடியாது.

அம்மாவுக்கே துரோகம்
அம்மாவுக்கே துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர் செல்வத்துக்கு துரோகம் செய்ய மாட்டாரா? ஆட்சி நடத்த தேவையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவி கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அடுத்ததாக முதல்வர் வேட்பாளர் பதவி எதிர்க்கட்சித் தலைவர் பதவி என கொடுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்துள்ளார். இந்த துரோகம் நீண்ட நாள் நிலைக்காது ஒவ்வொரு பிறந்த நாள் கொண்டாடும் போதும் சாவு நெருங்குகிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நன்றி செய்தவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள். அதிமுகவை அழிக்க வேண்டும் என நினைக்கும் சக்திகளுக்கு துணை போகாதீர்கள். அதிமுகவை அழிக்காதீர்கள் என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications