ரைட்டு.. இப்படி போகுதா ரூட்டு? ‘அதே இடம்’ ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பண்ருட்டியார்.. இனி எல்லாம் சுபம்?
சென்னை : அதிமுக பொன்விழா நிறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் என பிளான் செய்து கொண்டிருக்க, ஓ.பன்சென்னை னீர்செல்வம் டீம் கமுக்கமாக ஒரு திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் கட்சிக் கொடியேற்ற இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதில் தான் ஒரு பிளான் இருக்கிறதாம்.
பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனைப்படி ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இதில் சசிகலாவின் பங்கும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சசிகலா - ஓபிஎஸ் இணைப்புக்கு பாலமாகச் செயல்படும் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டிருக்கும் கணக்கு 'வேற லெவல்' என்கிறார்கள், ஓபிஎஸ், சசி ஆதரவாளர்கள்.
இந்த பக்கம் சாயப்போறாரா? 'தனி ரூட்' - ஓபிஎஸ் டீமின் 3 தலைகள் நடத்திய சீக்ரெட் மீட்டிங்! என்னாச்சு?
அதிமுக போர்க்களம்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான மோதல் கடந்த 4 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகின்றனர். முக்கிய நிர்வாகிகளும் அணி மாறி வருகின்றனர். ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் நவம்பரில் விசாரணைக்கு வரவிருப்பதால், அதுவரை கட்சி ரீதியாக தங்களை பலப்படுத்தும் முயற்சிகளில் இரு அணியினருமே ஈடுபட்டு வருகின்றனர்.
திரைமறைவில் பேச்சுகள்
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் சசிகலா, டிடிவி தினகரன் உடன் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகளை இன்னமும் சசிகலா நேரில் சந்திக்கவில்லை. திரைமறைவில் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் எதேச்சையாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மற்றும் சசிகலா ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.
ரூட் போடும் பண்ருட்டியார்
மேலும், பண்ருட்டி ராமச்சந்திரன் தற்போது சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. பண்ருட்டியாரை இருவரும் மாறி மாறி சந்தித்த நிலையில், அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசினார். தொடர்ந்து அவரை அதிமுகவின் ஆலோசகராக ஓபிஎஸ் நியமித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அவரைக் கட்சியை விட்டே நீக்கினார். எனினும், பண்ருட்டி ராமச்சந்திரன் மூலம் சசிகலாவை சந்திப்பதற்கான ஏற்பாடுகளில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதற்காகத்தான் பண்ருட்டியார் ஒரு ரூட்டை போட்டுக் கொடுத்திருக்கிறாராம்.
3 பேரும்
வரும் அக்டோபர் 17ஆம் தேதி, அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவைக் கொண்டாட ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா என மூன்று தரப்பினருமே தயாராகி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளது. அதிமுக 51வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு வருகிற 17, 20 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்கள், அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்க்கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவும் சென்னை ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு விழாவை கொண்டாட முடிவு செய்திருக்கிறார்.
ஓபிஎஸ் மூவ் - அந்த இடம்
இதில், ஓ.பன்னீர்செல்வத்தின் மூவ் தான் முக்கியமாக கவனிக்கத்தக்கது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஓ.பன்னீர்செல்வம், சென்னை, தி.நகர் ஆற்காடு தெருவில் இருக்கும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு சென்று, அ.தி.மு.க கொடி ஏற்றி வைக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த பிளானை போட்டுக் கொடுத்தது வேறு யாரும் இல்லை பண்ருட்டி ராமச்சந்திரன் தானாம். இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பை ஜேசிடி பிரபாகரிடம் ஒப்படைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக பொதுச் செயலாளர்
தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லம் எம்ஜிஆர் வளர்ப்பு மகளான லதா ராஜேந்திரனின் மகன் குமார் ராஜேந்திரனின் நிர்வாகத்தில் இருக்கிறது. குமார் ராஜேந்திரன் சசிகலா தரப்புக்கு நெருக்கமாக அறியப்படுபவர். கடந்த ஆண்டு அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்க நாளில் இந்த நினைவு இல்லத்தில் தான் சசிகலா கொடியேற்றினார். இந்தக் கொடிக் கம்பத்தின் கீழ் கொடியேற்றியவர் 'அதிமுக பொதுச் செயலாளர்' வி.கே.சசிகலா என்று பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் இருக்கிறது.
இணைத்தல் + கணக்கு
சசிகலா இல்லம் அமைந்துள்ள பகுதியில், அதுவும் சசிகலா பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருக்கும் அதிமுக கொடிக் கம்பத்தில், ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றுவதன் மூலம், அனைவருக்கும் ஒரு முக்கியமான சிக்னலை ஓ.பன்னீர்செல்வம் கொடுக்க இருப்பதாகவும், மிக விரைவில் அடுத்தகட்ட முயற்சிகள் வேகமெடுக்கும் என்றும் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சசிகலா - ஓபிஎஸ் இடையே, யார் முதல் அடியை எடுத்து வைப்பது என்பதில் தொடரும் தயக்கம், இதோடு முடிந்துவிடும் என்று புள்ளி வைக்கிறார்கள் இருவரின் ஆதரவாளர்கள்.