வாணியம்பாடியில் ஓவைசி கட்சிக்கு கவுரமான மாஸ் ஓட்டு - கிருஷ்ணகிரி, சங்கராபுரத்தில் வாஷ் அவுட்டு?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓவைசி கட்சி வாணியம்பாடி தொகுதியில் மட்டும் கவுரமான ஓட்டுகளை பெறும் என்கின்றன கருத்து கணிப்புகள். ஆனால் கிருஷ்ணகிரி, சங்கராபுரம் தொகுதியில் மிக சொற்பமான வாக்குகளைத்தான் அந்த கட்சியால் பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன கருத்து கணிப்புகள்.
ஹைதராபாத்தை மையமாக கொண்ட ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, தென்னிந்திய மாநிலங்களைத் தாண்டி வட இந்தியா, மேற்கு வங்கம் என பல மாநில தேர்தல்களிலும் கால் பதிக்கிறது. ஓவைசி கட்சியைப் பொறுத்தவரையில் அகில இந்திய அளவிலான முஸ்லிம்களின் பிரதிநித்துவம் பெற்ற கட்சியான உருவெடுக்க முயற்சிக்கிறது.
பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 5 எம்.எல்.ஏக்களை ஓவைசி கட்சி பெற்றது. அத்துடன் ஓவைசி கட்சி கணிசமான வாக்குகளை பல தொகுதிகளில் பிரித்ததால் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கவும் முடியாமல் போனது. தமிழக சட்டசபை தேர்தலிலும் கணிசமான இடங்களில் போட்டியிட ஓவைசி கட்சி கவனம் செலுத்தியது.
நிராகரித்த திமுக
முதலில் திமுக கூட்டணியில் இடம்பெறுவது என தீர்மானித்தது ஓவைசி கட்சி. திமுக தலைமையும் கூட இதற்கு ஓகே சொன்னது. ஆனால் காலம் காலமாக திமுக கூட்டணியில் நீடிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை ஓவைசி கட்சியை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் திமுகவும் பின்வாங்கியது.
அமமுகவுடன் கூட்டணி
இதனால் கமல்ஹாசனின் மநீம, தினகரனின் அமமுக ஆகியவற்றின் தலைமையிலான ஒரு அணியில் ஓவைசி கட்சி இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சி இடம்பெற்றது. அந்த கட்சிக்கு வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
வாணியம்பாடியில் அசத்தல்
வாணியம்பாடி தொகுதியில் அக்கட்சியின் தமிழக தலைவர் வகீல் அகமது போட்டியிடுகிறார். கடந்த 2016 தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் சுமார் 10,000க்கும் அதிகமான வாக்குகளை வகீல் அகமது பெற்றிருந்தார். அதாவது சுமார் 5%-க்கும் அதிகமான ஓட்டுகளை கடந்த தேர்தலில் ஓவைசி கட்சி பெற்றிருந்தது. தற்போதைய தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளிலும் ஓவைசி கட்சி, வாணியம்பாடி தொகுதிகளில் இன்னமும் கூடுதல் வாக்குகளைப் பெறும் என கூறப்பட்டுள்ளது.
2-வது இடத்துக்கும் வாய்ப்பு?
அதாவது அமமுகவுடன் ஓவைசி கட்சி கூட்டணி வைத்திருப்பதால் இயல்பாகவே ஓவைசி கட்சிக்கு விழும் வாக்குகள், அமமுகவுக்கான வாக்குகள் என 20% முதல் 25% வாக்குகளை ஓவைசி கட்சி, வாணியம்பாடி தொகுதியில் பெற வாய்ப்புள்ளது. இதனால் இந்த தொகுதியில் திமுக அமோக வெற்றியை அறுவடை செய்ய காத்திருக்கிறதாம். அதிமுகவை ஒருசில வாக்கு சதவீத வித்தியாசத்தில் ஓவைசி கட்சி பின்தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறினாலும் ஆச்சரியமில்லை என்பதையே கருத்து கணிப்புகள் சொல்கின்றன.
2 தொகுதிகளில் வாஷ் அவுட்?
அதேநேரத்தில் கிருஷ்ணகிரி, சங்கராபுரம் தொகுதியில் 2% அல்லது 3% வாக்குகள் அளவுதான் ஓவைசி கட்சிக்குமாம். ஆக தமிழகத்தில் அமமுகவுடன் ஓவைசி கட்சி கூட்டணி வைத்திருப்பதால் அனேகமாக அதிமுகவின் வெற்றிக்குதான் அந்த இந்த தேர்தலில் வேட்டு வைத்திருக்கிறது என்றே சொல்லலாம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.