வில்லங்க சான்றிதழ் போல இனி பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம்! தமிழக அரசு சூப்பர்.. நிறைய பலன்கள்
சென்னை: சொத்தின் வில்லங்க சான்றிதழை போல இனி பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம். இதற்கான வசதியை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.. பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.. இந்த புதிய நடைமுறையின் மூலம் கிடைக்கும் வசதிகள் என்னென்ன? எப்போது முதல் இந்த சேவை நடைமுறைக்கு முழுமையாக வரும்? கட்டணம் உண்டா? என்பதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
முன்பெல்லாம் பட்டா பெற வேண்டுமானால் நடையாய் நடந்தே பெற வேண்டியிருந்தது. இதற்காக நேரமும், பணமும் விரயமாகி கொண்டிருக்கிறது.. புரோக்கர்களின் தலையீடும் அதிகமாக இருந்தது.. ஆனால், இப்போது அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில், பட்டா பெறுவது, பட்டா மாறுதல் செய்வது உள்ளிட்ட பத்திரப்பதிவு பணிகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வசதிகள்
அந்தவகையில், https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதாக பட்டா பெற்றுக்கொள்ளலாம்.
பொதுவாக, பட்டா மாற்றுவதில், உட்பிரிவற்ற பட்டா, உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என 2 வகைகள் இருக்கின்றன. அதாவது ஒருவர் தன்னுடைய பட்டாவில் உள்ள முழு நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்தால் அது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் ஆகும். அந்த நிலத்தை பகுதி, பகுதியாக பிரித்து விற்பனை செய்தால் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் ஆகும்.
உட்பிரிவு இல்லாத பட்டாக்களுக்கு உடனடியாக பத்திரப் பதிவுத்துறையில் இருந்து வருவாய்துறைக்கு குறிப்பு அனுப்பி நில அளவீடு, ஆவண ஆய்வு செய்து பத்திரப்பதிவு நடப்பது வழக்கமாகும்.
பத்திரப்பதிவு - பட்டா மாறுதல்
பத்திரப்பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கு உடனடி பட்டா மாறுதலும் செய்யப்படுவது போல, சொத்து பற்றிய உரிமை விவரங்களையும் ஆன்லைன் மூலமாகவே மக்கள் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக வில்லங்க சான்றிதழ் மூலம் பல்வேறு விவரங்களை அறியலாம்.
முக்கியமாக, சொத்தின் உரிமையாளர் யார்? இதற்கு முன்பு அந்த சொத்து யார் பெயரில் இருந்தது? வங்கியில் இந்த சொத்து அடமானத்தில் இருக்கிறதா? கடன் ஏதாவது வாங்கப்பட்டுள்ளதா? நிலத்தில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா? சொத்தின் மீது ஏதாவது பரிமாற்றங்கள் நடந்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளும் ஆவணம்தான் வில்லங்கச் சான்றிதழ்.
பட்டா வரலாறு - புதிய சேவை
ஆனால் பட்டாவில் இந்த அளவுக்கு விவரங்கள் இருக்காது.. அதனால்தான், வில்லங்க சான்றிதழ் போலவே, எல்லா விவரங்களையும், பரிமாற்றங்களையும் தெரிந்துகொள்ள தமிழக அரசு தற்போது புதிய அதிரடியை கையில் எடுத்துள்ளது..
பட்டாவை பற்றி மொத்த டீடெயிலும் தெரிந்து கொள்ளும் வகையில், "பட்டா வரலாறு" என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது..
இதன் மூலம், அந்த நிலத்தின் முன்பிருந்த பட்டா வைத்திருந்தவர்களின் பெயர்கள்? பெயர் எப்போது மாற்றப்பட்டது? எந்த ஆணையின் பேரில் மாற்றம் நடைபெற்றது? பட்டா எந்தெந்த காலக்கட்டத்தில் யாரிடம் இருந்தது? என்பது போன்ற விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.
வில்லங்க சான்றிதழ்
இந்த பட்டா வில்லங்க சான்றிதழ் பெற வேண்டுமானால் பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பட்டா வரலாறு கடந்த 2014-ம் வருடத்தில் இருந்துதான் எடுக்க முடியும்.
இந்த பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை இன்னும் ஒரு வாரத்தில் சோதனை முயற்சியாக ஆரம்பமாக போகிறதாம். முதல்கட்டமாக ஒரு தாலுகாவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கு போதுமான பலனும், வரவேற்பும் கிடைத்துவிட்டால், இந்த நடைமுறையை முதலமைச்சர் மாநிலம் முழுமையாக விரிவுபடுத்தி அறிவிப்பார் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இனி பட்டா வரலாறு
சொத்தின் வில்லங்க சான்றிதழ் போல இனி பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடியும் என்பதால், இது பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பட்டாவின் அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே தெரிந்து கொள்வதால், மோசடி, இழப்பு போன்றவற்றிலிருந்தும் விடுபட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications