"ஜீரோ கிளிக் அட்டாக்".. ஒரே நொடியில் போனை ஹேக் செய்யும் "பெகாசஸ்".. எப்படி செயல்படுகிறது? பின்னணி!
சென்னை: என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மொத்த இந்தியாவையும் உலுக்கி உள்ளது. இந்திய அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கும் இந்த ஸ்பைவேர் எப்படி செயல்படுகிறது, போனில் இருந்து எப்படி தகவல்களை திருடுகிறது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Recommended Video
பெகாசஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தொடங்கி பல முன்னணி பிரபலங்களின், அரசியல் தலைவர்களின் போன்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
"பெகாசஸ் புராஜக்ட்" என்ற பெயரில் தி கார்டியன் உள்ளிட்ட 16 ஊடகங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையின் அடிப்படையில் இந்த புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகள் மற்றும் பலரின் செல்போன் உரையாடல்கள் இதன் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.

யாருடையது?
பெகாசஸ் என்பது இஸ்ரேல் நிறுவனமான என்எஸ்ஓ குருப்பின் தயாரிப்பு ஆகும். பல்வேறு பாதுகாப்பு சாதனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் என்எஸ்ஓ நிறுவனம் பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கி உலகில் உள்ள அரசுகளுக்கு மட்டும் விற்பனை செய்து வருகிறது. செல்போன், சிம் பயன்படுத்தும் டேப்லெட் போன்ற கருவிகளில் ஊடுருவி தகவல்களை உளவு பார்க்கும் ஸ்பைவேர்தான் பெகாசஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் வாங்கலாம்
பெகாசஸ் ஸ்பைவேரை அனைவரும் வாங்க முடியாது. இந்த நிறுவனத்தின் விதிப்படி ஒரு நாட்டின் அரசு மட்டுமே இதை வாங்க முடியும். தனியாருக்கு இதை அந்த நிறுவனம் விற்கவில்லை. இந்த பெகாசஸ் ஸ்பைவேரை இதுவரை என்எஸ்ஓ நிறுவனம் 51% அரசு உளவு அமைப்புகளுக்கும், 38% அரசு விசாரணை அமைப்புகளுக்கும், 11% ராணுவத்திற்கும் விற்பனை செய்துள்ளது.

எப்படி?
ஒப்பந்தம் அடிப்படையில் மட்டுமே இது செயல்படும். அதே சமயம் பெகாசஸ் ஸ்பைவேரை விற்பனை செய்த பின் என்ஏஓ நிறுவனம் அதை இயக்க உதவி செய்யாது. இதற்கான தொழில்நுட்பங்களை கொடுத்து, எப்படி இயக்க வேண்டும் என்று பயிற்சியும் கொடுத்துவிடும். பெகாசஸை வாங்கும் அரசுதான் இதற்காக குழு அமைத்து அதை இயக்க வேண்டும்.

செலவு ?
பெகாசஸ் மொத்தமாக ஒரே நேரத்தில் பலரை உளவு பார்க்காது. யாருடைய போனுக்கு எல்லாம் பெகாசஸ் ஸ்பைவேர் செலுத்தப்படுகிறதோ அவர்களை மட்டுமே கண்காணிக்க முடியும். ஒரு லைசன்சுக்கு ஐம்பது முறை மட்டுமே பெகாசஸ் மூலம் உளவு பார்க்க முடியும். ஒருவரை இதன் மூலம் ஒருமுறை உளவு பார்க்க 80 முதல் 90 லட்சம் ரூபாய் செலவு ஆகும்.

எப்படி உளவு பார்க்கும்
பெகாசஸ் எப்படி உளவு பார்க்கும் என்று பார்க்கலாம். போனில் உங்களுக்கு வரும் லிங்கை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் பெகாசஸ் உங்கள் போனுக்குள் நுழையலாம். யாராவது ஒரு வீடியோ லிங்க் அனுப்பி பாருங்கள் என்று சொன்னாலோ அல்லது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ஒரு லிங்க் அனுப்பி அதை கிளிக் செய்ய சொன்னாலோ அதன் மூலம் இந்த பெகாசஸ் உங்கள் போனுக்குள் வரலாம். இதை ஒன் கிளிக் அட்டாக் என்று கூறுவார்கள். ஒரே கிளிக்கில் உங்கள் போன் ஹேக் ஆகும்.

ஜீரோ கிளிக்
இதில் இன்னொரு ஹேக் வகைதான் ஜீரோ கிளிக் அட்டாக். அதாவது எந்த கிளிக்கும் செய்யாமல், எந்த லிங்கையும் ஓபன் செய்யாமல் உங்கள் போனில் பெகாசஸ் நுழைந்து விடும். ஆப்பிள் போன்களில் இந்த பிரச்சனை உள்ளது. ஐ மெசேஜ் செயலில் இருக்கும் பக்ஸ் காரணமாக, வைரஸ் மெசேஜ் ஒன்றை உங்களுக்கு அனுப்பி பெகாசஸ் ஸ்பைவேரை உங்கள் போனில் செலுத்த முடியும். நீங்கள் அந்த மெசேஜை திறந்து பார்க்கவில்லை என்றாலும் கூட பெகாசஸ் உங்கள் போனில் நுழைந்துவிடும். இது ஜீரோ கிளிக் அட்டாக்.

என்ன செய்யும்?
இந்தியாவில் பலரின் ஐபோன் இப்படி ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. Android, iOS, Windows Phone, BlackBerry, Symbian போன்ற ஓஎஸ் தளங்களை இது தாக்கும் திறன் கொண்டது. உங்கள் போனில் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற செயலிகளையும் இது கண்காணிக்கும். உங்கள் போனில் வந்த பின், நீங்கள் அனுப்பும் மெசேஜை இது படிக்கலாம். நீங்கள் போனில் பேசுவதை கேட்கலாம். உங்களுக்கு தெரியாமல் உங்கள் போனின் கேமரா, மைக்கை ஆன் செய்து, அதை தொலை தூரத்தில் இருந்தே ரெக்கார்ட் செய்யலாம்.

புகைப்படம்
உங்கள் போனில் உங்களுக்கே தெரியாமல் புகைப்படங்களை செலுத்தலாம், ஆவணங்களை உட்புகுத்தலாம். நீங்கள் செய்யாத தவறை நீங்கள் செய்தது போல ஜோடிக்கலாம். ஏன் உங்களின் ஜிபிஎஸ்ஸை உங்களுக்கு தெரியாமல் ஆன் செய்து நீங்கள் எங்கே எப்போது செல்கிறீர்கள் என்று கண்காணிக்கலாம். உங்களின் போன் நம்பர் இருந்தால் போதும் இத்தனையையும் செய்ய முடியும்.

ஆதாரம்
பெகாசஸ் ஆதாரமே இன்றி ஹேக் செய்யும் என்றுதான் என்எஸ்ஓ இத்தனை நாட்கள் கூறி வந்தது. ஆனால் தற்போது ஐபோன்களிலும், சில வகை ஆண்டிராய்டு போன்களிலும் இது தடயங்களை விட்டு செல்கிறது. இந்த தடயங்களை வைத்தே தற்போது பெகாசஸ் ஹேக்கிங் குறித்த கண்டுபிடிப்பு உலகம் முழுக்க நிகழ்த்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும், யாரெல்லாம் ஹேக் செய்யப்பட்டார்கள் என்ற கூடுதல் விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications