லீவு முடிந்து சென்னை திரும்பிய மக்கள்... போக்குவரத்து நெரிசல் - சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு
4 நாள் தொடர் விடுமுறை முடிந்து ஏராளமான பொதுமக்கள் சென்னைக்கு திரும்பியதால், சுங்கசாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை: நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றிருந்த மக்கள் இன்று சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, வார விடுமுறை என 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் சென்னையிலிருந்து பலர் சொந்த ஊர் சென்றிருந்தனர்.
இந்நிலையில் விடுமுறை முடிந்து பொதுமக்கள் பலர் நேற்று சென்னைக்கு திரும்பியதால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி மற்றும் அதனையொட்டிய பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

வழக்கமாக அரை மணிநேரத்தில் கடக்க வேண்டிய சாலையை, சுமார் ஒன்றரை மணிநேரம் ஊர்ந்தப்படியே வாகனங்கள் கடந்தன. இதே போன்று உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே பல்வேறு ஊர்களில் சென்னைக்கு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வழக்கமாக 600 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், நேற்று ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. எனவே இதுபோன்ற தருணங்களில் போதிய அளவு அரசுப் பேருந்துகளை இயக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications