கருணாநிதி பணியாற்றிய இதழ்.. ஆரம்பித்து 97 வருசமாச்சு.. “எங்க ஆயுதம் இதான்” - ட்வீட் தட்டிய கனிமொழி!
சென்னை: 'குடிஅரசு' பத்திரிகை தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட நாள் இன்று. இதுதொடர்பாக தி.மு.க எம்.பி கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
6-8 மணி நேர மின் தடை.. இருளில் மூழ்கிய வடமாநிலங்கள்.. குஜராத், உ.பி, ம.பியில் நிலைமை மோசம்.. பின்னணி
தந்தை பெரியார் தனது பகுத்தறிவு, சுயமரியாதைக் கருத்துகளை மக்கள் மத்தியில் விதைக்கும் பிரச்சாரத்தை பல்வேறு வடிவங்களில் மேற்கொண்டார். அந்தவகையில், 'குடிஅரசு' இதழ் அவரது கருத்துகளைப் பரப்புவதற்கான முக்கியமான தளமாக இருந்தது.
குடிஅரசு
பெரியார் 1925ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி 'குடிஅரசு' இதழைத் தொடங்கினார். இந்த இதழ் தமிழ்ச் சமூக வரலாற்றில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. குடிஅரசின் முதல் சில இதழ்களில், மகாகவி பாரதியாரின் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.முதல் பக்கத்தில் குடிஅரசு பெயர் முத்திரையின் கீழ், "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம். எல்லோரும் இந்திய மக்கள். எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை. எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்ற வரிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், பெரியார் 1930களுக்குப் பிறகுதான் பாரதியாரை நிராகரித்தார். இப்படி குடிஅரசு இதழ் பெரியாரின் கருத்தோட்டம் குறித்து அறிந்துகொள்ள உதவும் ஆவணமாகும்.
ஏன் தொடங்கப்பட்டது?
'குடிஅரசு' இதழின் முதல் இதழில், "நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்ய வேண்டும். நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காவும் அறிவு வளர்ச்சிக்காகவும் கலை வளர்ச்சிக்காவும் மொழி வளர்ச்சிக்காவும் இதன் மூலம் உழைத்து வருவோம்.
ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து 'தேசம், தேசம்' என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. மக்களுள் தன்மதிப்பும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கிவளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்" என்று பெரியார் குடிஅரசின் நோக்கம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
மொழிச் சீரமைப்பு முயற்சி
பெரியார் தனது எழுத்துச் சீரமைப்பு முயற்சிகளை குடிஅரசு இதழில் தான் வெளியிட்டு வந்தார். பழைய வடிவங்கள் நீக்கப்பட்டு அச்சுக்கோர்க்க வசதியாக, ணா, னா, றா, ணை, னை லை, ளை ஆகிய சீர்திருத்த எழுத்து வடிவங்கள் 1935ஆம் ஆண்டில் இதழிலேயே முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகே இந்த வழக்கம் பொதுவானது.
பெரியாருக்கு சிறை தண்டனை!
1933 டிசம்பர் மாதம் குடிஅரசு இதழில் பெரியாரால் எழுதப்பட்ட, "இன்றைய ஆட்சிமுறை என் ஒழிய வேண்டும்?' என்னும் ஆசிரியர் உரைக்காக அவருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
கருணாநிதி வேலை செய்த இதழ்
"ஈரோடு குருகுலத்தில் படித்து வந்த மாணவன் நான்" என அடிக்கடி பெருமையுடன் சொல்பவர் கலைஞர் கருணாநிதி. ஈரோட்டில் பெரியார், அண்ணாவுடன் இணைந்து குடியரசு மற்றும் விடுதலை பத்திரிகை பணிக்காக, 1944-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் கருணாநிதி தங்கியிருந்தார்.
97 ஆண்டுகள்
இப்படி, தமிழ்ச் சமூக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்ட 'குடிஅரசு' இதழ் தொடங்கப்பட்ட நாள் இன்று. குடிஅரசு இதழ் தொடங்கப்பட்டு இன்று 97 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
கனிமொழி எம்பி ட்வீட்
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, "ஏற்றத்தாழ்வுகளைச் சமரசமின்றி எதிர்த்த குடிஅரசு பத்திரிகை தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட நாள் இன்று. திராவிட இயக்கம், பகுத்தறிவின் அடிப்படையில் மக்களை வழிநடத்த பெரும் கருவியாக அமைந்தது பெரியாரின் குடியரசு இதழ்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
டவுன்லோடு செய்ய
பெரியாரின் குடிஅரசு இதழ்கள் ஆண்டுவாரியாக 1925 முதல் 1949 வரை திவிக இணையதளத்தில் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம் என திராவிடர் விடுதலைக் கழகம் ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.