உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வெற்றி செல்லாது.. எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் திடீர் வழக்கு.. பரபரப்பு!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் உதயநிதி ஸ்டாலின்.

பெரிய வெற்றி
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. பாமக சார்பில் கஸாலி களமிறங்கியிருந்தார். தீவிர போட்டி சூழல் இருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்போது பம்பரமாக சுழன்று தனது தொகுதியில் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

வேட்பாளர் வழக்கு
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியின் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர், வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குற்ற வழக்குகள்
அந்த மனுவில் அவர் கூறுகையில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதயநிதி வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், தொகுதியின் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று அறிவிக்கவும் வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுகவில் பரபரப்பு
இந்த வழக்கு ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி தேர்தல் வெற்றிக்கு எதிராக வேட்பாளர் ஒருவர் வழக்கு தொடரப்பட்டுள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications