ப்ளீஸ்.. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை.. பயமுறுத்த வேண்டாமே!
சென்னை: இன்றைக்கு பரவலாக வரும் ஒரு தகவலை பகிர்கிறேன். கொரோனாவில் உள்ளவர்கள் ஊடகங்களை பார்ப்பதை நிறுத்தினால் அவர்கள் உயிர் பிழைக்கலாம் என்று ஒரு தகவலை பார்த்தேன். ஆம் அந்த தகவல்களில் சில உண்மை இல்லாமல் இல்லை.
மக்களின் பயத்தை அதிகப்படுத்தி ஒரு சில சமூக வலைதளங்கள் செய்யும் காரியங்கள் மிகவும் அபாயகரமானவை. இவர்களில் யாருக்கும் பொறுப்பும் இல்லை, அக்கறையும் இல்லை.
அவர்களை பொறுத்தவரை எத்தனை பேரை பார்க்க வைத்தோம். எத்தனை பேரை லைக் செய்ய வைத்தோம். எத்தனை பேர் நம்முடைய விஷயங்களை ஷேர் செய்தார்கள் என்பதாக உள்ளது.

உடல் வலி
முதலில் சமூக வலைதளங்கள் கொரோனாவையும் அதன் பின்னர் கரும்பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என்ற விதவிதமான நோய்களை கூறி அச்சுறுத்தி வருகின்றன. நோய்களை பற்றி கூறினால் பரவாயில்லை. இந்த அறிகுறி இருக்கிறதா உங்களுக்கு இந்த நோய், இந்த அறிகுறி இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த நோய், இருமினால், தும்மினால், காய்ச்சல் அடித்தால், வயிறு வலித்தால், உடல் வலி ஏற்பட்டால் என எந்த பிரச்சினை என்றாலும் இப்போது மக்களை பயத்தில் உறைய வைத்த பெருமை சமூக வலைதளங்களையே சாரும்.

ஆராய்ச்சி தகவல்
இன்னும் சில மோசமான அபத்தங்களும் நடக்கின்றன. தடுப்பூசி போட்டால் இதயத்தில் பிரச்சனை வரும் என ஆராய்ச்சி தகவல், தடுப்பூசி போட்டால் இறந்துவிடுகிறார்கள், என்றெல்லாம் கூட பரப்பப்படுகின்றன. மேலும் சமூக ஊடகங்களில் தலைப்பில் ஒரு விஷயத்தை வைத்து பயமுறுத்திவிட்டு உள்ளே சாதாரணமாக போடும் சம்பவங்ளும் அதிகமாக உள்ளன. இதை மேலோட்டமாக பார்க்கும் மக்கள் எந்த அளவிற்கு தவறாக நினைப்பார்கள் என்பதை பற்றி கவலைப்படுவதும் இல்லை.

விழிப்புணர்வு
இந்த போக்குகள் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய தவறானவை ஆகும். தடுப்பூசி போட வைக்கவும், மக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வைக்கவும் அரசுகள் படாதபாடு படுகின்றன. அதை ஒரு சில சமூக வலைதளங்கள் மொத்தமாக காலி செய்கின்றன. இப்போது பிரபல ஊடங்களின் போட்டோ கார்டுகளை தவறாக திரித்து, வரும் தகவல்கள் அச்சுறுத்தும் வகையில் இருக்கின்றன. அதை நம்பாமல் ஊடகங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அல்லது சமூக வலைதளங்களில் அல்லது இணையதளங்களில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

தகவல்களை நம்பாதீர்கள்
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை.. தயவு செய்து பயமுறுத்த வேண்டாம். மக்களே உங்கள் நம்பிக்கையும், மருத்துவர்கள் தரும் மருந்தும் மட்டுமே நோயில் இருந்து நீங்கள் மீள உதவும். எனவே தயவு செய்து சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பாதீர்கள். குறிப்பாக கொரோனா பெருந்தொறு முடியும் வரை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை அப்படியே நம்பாமல், அவை உண்மையா என்பதை தீர விசாரித்து உறுதி செய்தால் சிறப்பு.












Click it and Unblock the Notifications