"செம ஷாட்".. ஹெலிகாப்டரில் இருந்து மோடி எடுத்த வீடியோ.. டக்கென கண்முன்னாடி வந்து போகும் "கருணாநிதி"!
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை மோடி வீடியோ எடுத்தார்
சென்னை: கன்னியாகுமரி தேர்தல் பிரச்சாரத்துக்காக செல்லும்போது, திருவள்ளுவர் சிலையை ஹெலிகாப்டரில் இருந்தபடி வீடியோ எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.. "கம்பீரமான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை" என புகழாரம் சூட்டி உள்ளார். மோடி எடுத்த இந்த வீடியோ படுவைரலாகி வருகிறது...!
ஒரு சமூகம் தன்னெழுச்சியோடு, சுயமானத்தோடு நிற்கவேண்டும் என்றால் அது இறுக பற்றி கொள்ள அடையாளம் ஒன்று வேண்டும்... அந்த அடையாளத்தை திருவள்ளுவர் ரூபத்தில் பல இடங்களில் உருவாக்கி நிர்மாணித்தவர்தான் மறைந்த கலைஞர் கருணாநிதி.
இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.. 1963-ல் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது.. அப்போதே சட்டமன்றத்தில் திருவள்ளுவரின் படத்தை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் கருணாநிதி.. இதற்காக அவர் எவ்வளவு மெனக்கெட்டார் என்பதை நாடறியும்..!
மத அடையாளம்
அதற்கு முன்பு வரையப்பட்ட வள்ளுவர் படங்களில் , திருவள்ளுவர், மொட்டையடித்து, பூணூல் அணிந்து, விபூதி பட்டை அடித்து அமர்ந்திருப்பார். இதைதான் உடைத்தெறிய முயற்சி செய்தார் கலைஞர்... திருவள்ளுவருக்கு எந்த மத அடையாளங்களும் இருக்கக் கூடாது என்று முடிவு செய்து, இதை தவிர்க்கவே திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல படம் வரைய செய்த தகவல்களும் நமக்கு கிடைக்கின்றன.. அதுமட்டுமல்ல, திருமாவளவனும் தற்போதைய பிரச்சாரங்களில் இதைதான் சொல்லி வருகிறார். "திருவள்ளுவருக்கு பூணூல் போட்ட படம்தான் தொடக்கத்தில் பயன்பாட்டில் இருந்தது.. ஆனால், அந்த பூணூலை தூக்கி எறிந்து புதுவடிவம் தந்தவர் கலைஞர் கருணாநிதி" என்கிறார்.
வள்ளுவர் தினம்
அதுமட்டுமல்ல, 1969-ல் முதல்வரானபோது திருவள்ளுவரின் பிறந்தநாளை தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்றும் பொங்கல் என்பது எல்லா மதத்தினருக்குமானது என்பதை குறிக்கவும் பொங்கல் கொண்டாட்டத்திற்குள் திருவள்ளுவர் தினத்தையும் சேர்த்தார் கலைஞர் கருணாநிதி. இதற்கு பிறகு வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலைகள் என கருணாநிதி செய்த பல பணிகள் மகத்தானவை. அந்த வரிசையில்தான் குமரி கடலில் உள்ள வள்ளுவரையும் நாம் சேர்க்க வேண்டி உள்ளது.
வள்ளுவர் சிலை
தென் தமிழகத்தின் பிரம்மாண்டமாக நிற்கிறது 2 சின்னங்கள்.. ஒன்று, விவேகானந்தர் பாறை.. மற்றொன்று வள்ளுவர் சிலை.. 1989-90களில் இந்த பணி ஆரம்பமானது.. ஆனால், ஆட்சியில் சிக்கல், ஆட்சி கலைப்பு, இப்படி பல தடைகள் வரவும் அந்த பணி கொஞ்சம் தாமதமானது.. இறுதியில் 2000-ல்தான் அந்த பணி முடிவடைந்தது.. ஒட்டுமொத்த நாடும் இந்த சிலையை வியந்து பார்த்தது.. எந்த "சுனாமி"க்கும் அசைந்து கொடுக்காத சிலையாக தென்தமிழகத்தை இன்றளவும் மிரட்டி கொண்டிருக்கிறது இந்த வள்ளுவர் சிலை...!
அடையாளம்
அதேபோல, ஒரு கடவுள் மறுப்பு கொள்கை உடையவராக இருந்தும், இந்து ஆன்மீக துறவி விவேகானந்தருக்கு, அவர் தியானம் செய்த அதே பாறையில் நினைவு மண்டபம் அமைக்கும் பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையும் கருணாநிதி போன்ற பெருந்தகைகளுக்கு இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
On the way to the rally in Kanyakumari, caught a glimpse of the majestic Vivekananda Rock Memorial and the grand Thiruvalluvar Statue. pic.twitter.com/Mveo5k1pTa
— Narendra Modi (@narendramodi) April 2, 2021
கம்பீரமான சிலைகள்
இப்படிப்பட்ட கருணாநிதி நிறுவிய, இந்த சிறப்பு வாய்ந்த இரு அடையாளங்களையும்தான் பிரதமர் மோடி வீடியோ எடுத்துள்ளார்.. கன்னியாகுமரி தேர்தல் பிரச்சாரத்துக்காக செல்லும்போது, ஹெலிகாப்டரில் இருந்தபடி வீடியோ எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.. கம்பீரமான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை என புகழாரம் சூட்டி உள்ளார். மோடி எடுத்த இந்த வீடியோ படுவைரலாகி வருகிறது... மீண்டும் ஒருமுறை கருணாநிதியை இந்த தமிழகம் நன்றியுடன் நினைவுகூர்ந்தும் வருகிறது..!