செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் மோடி படம் எங்கே? மனசு இல்லைனா ஏன் கூப்பிடுறீங்க?- வெடிக்கும் சர்ச்சை
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி பங்கேற்க இருக்கும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்கள், பாடலில் பிரதமர் மோடி படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பர பதாகைகளில் பிரதமர் படம் இடம்பெறாதது, அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது என தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
அரசின் விளம்பர பதாகையில், பிரதமர் படம் இடம் பெறாவிட்டால், நாங்கள் தனியாக வைப்போம் என பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வரும் 28ஆம் தேதி முதல் முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44-வது செஸ் ஒலியம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

ஸ்டாலின் நடிப்பில்
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான "வெலகம் டு சென்னை" பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்தப் பாடலில் முதல்வர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான்களும் இடம் பெற்றுள்ளனர்.

பிரதமருக்கு அழைப்பு
சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மெய்யநாதன், எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோர் அழைப்பிதழ் வழங்கினர். மத்திய அமைச்சர்கள் பலருக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்து, செஸ் ஒலிம்பியாட்டுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட'தம்பி' சின்னத்தையும் வழங்கியுள்ளனர்.

காழ்ப்புணர்ச்சி
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நேற்று உள்துறை செயலர் பணீந்திர ரெட்டியை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

ஸ்டாலின் குடும்ப விழாவா?
கரு.நாகராஜன் பேசுகையில், "செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க தி.மு.க எம்.பி க்கள் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தை பார்த்தால், முதல்வர் குடும்ப விழா போல் உள்ளது. விளம்பரத்தில் ஸ்டாலின் படம் உள்ளது. அதில் தவறு இல்லை. பிரதமர் படமும் இடம்பெற வேண்டும்.

ஏன் அழைக்க வேண்டும்
பேனரில் பிரதமர் படம் வைக்க மனமில்லை என்றால், ஏன் பிரதமரை அழைக்க வேண்டும்? பிரதமர் மோடி படம் விடுபட்டதற்குக் காரணம் தமிழக அரசின் தவறா, செஸ் கூட்டமைப்பு தவறா என தெரியவில்லை. பிரதமர் படம் இடம் பெறாததற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசின் விளம்பர பதாகையில், பிரதமர் படம் இடம் பெறாவிட்டால், நாங்கள் பதாகை வைப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications