விரைவில் பஸ் கட்டணம் உயர்வு? அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்த வேண்டாம்..அன்புமணி ராமதாஸ் தாக்கு
சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளதற்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்,
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதற்குப் போக்குவரத்துத் துறையில் நடக்கும் ஊழல்கள் என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
கோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா
அதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், போக்குவரத்துத் துறையின் நஷ்டம் பல மடங்கு அதிகரித்து உள்ளது.
எடப்பாடி பழனிசாமி
இதனால் முறையாகப் பராமரிப்பு பணிகளைக் கூட மேற்கொள்ள முடிவதில்லை என்ற புகார்களும் எழுகின்றன. இதனிடையே சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் அனைத்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சாடினார். மேலும், நிதி ஆதாரத்தைத் திரட்ட தமிழக அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்றும் இதனால் போக்குவரத்து, மின் கட்டணம் உயரும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார்.
கே.என்.நேரு
இதற்கிடையே சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, மக்களைப் பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் நிதி ஆதாரத்தை அதிகரிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் கூறியிருந்தார். மேலும், சூழலுக்கேற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புமணி ராமதாஸ்
ஏற்கனவே, அத்தியாவசிய பொருட்களின் விலை தொடங்கி, விலைவாசி உயர்வு காரணமாகப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு மேலும் அதிர்ச்சியைத் தருவதாகவே உள்ளது. இந்நிலையில், பேருந்து கட்டணம் குறித்து மக்களை அமைச்சர்கள் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்த வேண்டாம் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அச்சம் & அதிர்ச்சி
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை மக்களை பாதிக்காத வகையில் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மக்களை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தும். இது தேவையற்றது; தவிர்க்கப்பட வேண்டும்! பேருந்து கட்டணம் மிக, மிக குறைந்த அளவில் உயர்த்தப்பட்டால் கூட அது மக்களை கடுமையாக பாதிக்கும். இத்தகைய சூழலில் மக்களை பாதிக்காத பேருந்து கட்டண உயர்வு என்று அமைச்சர் கே.என். நேரு கூறியிருப்பதன் பொருளை புரிந்து கொள்ள முடியவில்லை!
ஏன் இந்த குழப்பம்
பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று கடந்த வாரம் தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த வாரம் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நேரு கூறுகிறார். ஏன் இந்த குழப்பம்? வரலாறு காணாத பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த நேரத்தில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டால் அதை மக்களால் தாங்க முடியாது. கட்டண உயர்வுக்கு பதிலாக சீர்திருத்தங்கள் மூலம் போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.