பாமக, தேமுதிக இந்த ஒரு விஷயத்தில் அவ்வளவு ஒற்றுமை .. மிரளும் அதிமுக, பாஜக
சென்னை: பாமக, தேமுதிக இந்த ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடம் இந்த கட்சிகள் வைக்கும் அந்த ஒரு டிமாண்ட் தான் பேசு பொருளாக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 3 மாதத்தில் நடக்க போகிறது. அனேகமாக ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, 2019ம் ஆண்டிலும் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 2024ம் ஆண்டிலும் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்..

10 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னரும் அசுர பலத்துடன் பாஜக இருக்கும் நிலையில், அதை எதிர்க்க காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அமைத்துள்ளது. இந்தியா கூட்டணியில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் தேர்தலுக்கு பின்பான கூட்டணிக்கே வாய்ப்பு என்கிற நிலை இந்தியா கூட்டணியில் நிலவுகிறது. இதனால் நேருவுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி 3 வது முறையாக பிரதமராகும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த முறை மொத்தம் உள்ள 39 இடங்களில் 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஒரே ஒரு இடத்தில் அதிமுக வெற்றி பெற்றது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ள அதிமுக , வேறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அதேநேரம் தமிழகத்தில் ஆளும் கட்சி கூட்டணியான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் ஆகியவை உள்ளன,
பாஜக கூட்டணியை பொறுத்தவரை தமிழ் மாநில காங்கிரஸ் வாசன் + புதிய நீதி கட்சி ஆகியவை கூட்டணியில் உள்ளன. அமமுக கூட்டணியில் சேர்வது உறுதியாகி உள்ளது. இதேபோல் அதிமுக ஓபிஎஸ் அணி, புதிய தமிழகம் ஆகியவை பாஜக கூட்டணியில் சேரும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் தேமுதிக, பாமகவை பாஜக கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் பாமகவிடம் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
பாஜக கூட்டணியில் சேர பாமக, 12 லோக்சபா தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பாஜக 7 இடங்களை ஒதுக்கீடு செய்ய முன்வரும் நிலையில் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக 22 தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே பிரேமலதா தலைமையிலான தேமுதிகவை பொறுத்தவரை பாஜக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேமுதிக 4 நாடாளுமன்ற தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..
பாமக தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளுமே நாடாளுமன்ற தொகுதிகளை தாண்டி, ராஜ்யசபா சீட்டும் கேட்பதில் ஒற்றுமையாக உள்ளன. இதனிடையே அதிமுகவும் பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 6 சீட் தர அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேமுதிக பாமக இரண்டுமே ராஜ்யசபா சீட்டில் உறுதியாக உள்ளதால் எந்த கூட்டணியில் அதற்கு வாய்ப்பு உள்ளதோ அங்குதான் இவை கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications