துரைமுருகன் முயற்சிகள் தோல்வி.. திமுகவுக்கு வாய்ப்பில்லை.. ஏமாற்றத்தில் பாமக!
Recommended Video
சென்னை: பாமகவை திமுக கூட்டணிக்குக் கொண்டு வர துரைமுருகன் கடுமையாக முயன்றும் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து அக்கறை காட்டவில்லை என்பதால் திமுக கூட்டணிக்கு பாமக வரும் வாய்ப்புகள் முற்றிலுமாக மங்கிப் போய் விட்டதாக சொல்கிறார்கள்.
தேர்தல் நெருங்க நெருங்க எந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற காட்சிகள் வேகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி முடிவாகிவிட்ட நிலையில் பாஜகவும் மெகா கூட்டணியை அமைப்போம் என்று கூறிவருகிறது. அதற்கு அதிமுகவில் இருவேறு கருத்துகள் ஓங்கி ஒலித்துவருவதால் பாஜகவுடன் கூட்டணியை அறிவிக்கலாமா வேண்டாமா என்று பலத்த யோசனை செய்கிறது அதிமுக. அதே வேளையில் பாமக அதிமுகவை நெருங்க தொடங்கியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இனிமேல் திராவிட கட்சிகளோடு கூட்டணியே கிடையாது என்றவர் பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ். ஆகவே அவர் அதிமுக, திமுக இரண்டோடும் கூட்டணி வைக்காமல் தினகரன், பாஜக போன்றோரோடு கூட்டணி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே ராமதாஸ் விடையளித்துள்ளார். தேர்தல் அரசியலில் தானோ அல்லது தனது குடும்பமோ போட்டியிட மாட்டோம் என்று வீர வசனம் பேசியிருந்தார். அதன்பிறகு தேர்தல் அரசியலில் என்ன நடந்தது பாமகவில் இப்போது யார் யார் கோலோச்சுகின்றனர் என்பதெல்லாம் ஊரறிந்த ரகசியமே.
இந்த நிலையில் பாமகவை எப்படியேனும் திமுக கூட்டணியில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் நினைத்தார். ஸ்டாலினுடன் வலியுறுத்தவும் செய்திருந்தார். ஆனால் ஸ்டாலினின் கணக்குகளோ வேறு மாதிரி இருக்கிறது. இயல்பாகவே வடமாவட்டங்களில் திமுக பலம் வாய்ந்த கட்சி. இப்போது மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் கூட இருக்கும்போது நிச்சயமாக கிட்டத்தட்ட 47% வாக்குகளை வாங்கிவிடலாம் என்பதுவும், அதற்கு வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினால் போதும் என்பது அவரது கணக்கு.
அப்படி இருக்கையில் வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதிகளை ஏன் அவர்களுக்கு தூக்கி கொடுக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் நிலைப்பாடு. அதோடு அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது அவருக்கு அப்போது செய்யப்பட பிரச்சாரம் தனக்கு எதிராக நடந்த செயல்பாடுகள் என்பது ஸ்டாலினின் நம்பிக்கை. ஆகவேதான் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவை வைத்து பாமகவுக்கு எதிரான கருத்துகளை கூறவைத்தார். இப்போது இதையெல்லாம் தாண்டி கூட்டணி கட்சியான காங்கிரஸ் பாமகவை திமுக கூட்டனியில் கொண்டு வர லாபி செய்த பிறகும் ஸ்டாலின் அதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இப்படி தங்களுக்கான அத்தனை கதவுகளும் திமுக தரப்பில் அடைக்கப் பட்டுவிட்டதால் இப்போது பாமக அதிமுக பக்கம் சாய்வதற்க்கான அத்தனை அறிகுறிகளும் தெரிகின்றன.
எடப்பாடி பழனிசாமியும் பாமகவை தங்களோடு சேர்த்துக் கொள்ளவே விரும்புவார். ஏனெனில் பாஜகவை தங்களோடு சேர்த்துக் கொள்ள இருவேறு கருத்துக்கள் இருக்கும் சூழலில் தன்னை ஸ்டாலினுக்கு இணையான ஒரு தலைமையாக காட்டிக்கொள்ள அவர் பாமகவை தங்களோடு இணைத்து கெத்து காட்டவே விரும்புவார். பாமகவும் அவரோடு இணைவதையே இப்போது விரும்பும். ஆகவேதான் மத்திய அரசுக்கு எதிராக பலமுறை முழங்கிய ராமதாஸ் நேற்று வெளியான மத்திய பட்ஜெட்டை பெருமளவு விமர்சிக்கவே இல்லை.
அவருடைய அறிக்கையில் ஒரு சாப்ட் கார்னர் இருந்ததை உணர முடிந்தது. அதிமுக இப்போது பாஜகவுடன் கூட்டணி என்பதை அறிவித்தாலும் அல்லது சிறுபான்மியின வாக்குகளை பெறுவதற்காக இப்போது பாஜகவை சேர்க்காமல் தேர்தலை சந்தித்துவிட்டு தேர்தலுக்கு பிந்தைய சூழலில் ஆதரவளித்தாலும் பாஜக மீதான் ஒரு மென்மையான போக்கு தனக்கு உதவலாம் என்று பாமக எண்ணலாம். அதோடு நேற்றைய நிதி நிலை அறிக்கையை பாராட்டி மிக மென்மையாக விமர்சித்தவர் அடுத்து இம்மாதம் 8-ம் தேதி வரப்போகும் தமிழக பட்ஜெட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.