“பாமக 2.0” அன்புமணியின் புது பார்முலா! வருகிறதா “பாட்டளி நல கூட்டணி” .. உற்சாகத்தில் பாட்டாளிகள்..!
சென்னை : தனக்கு பதவி ஆசை இல்லை எனவும், ஒருமித்த கொள்கை கொண்ட கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் ஆட்சியமைக்க தயார் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத ஒரு புதிய கூட்டணிக்கு வழிவகுக்கும் என பாமக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
கடந்த நாடளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக அக்கூட்டணியில் இருந்து விலகி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது. மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.
இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள்.. அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.. அமைச்சர் சிவசங்கர் அதிரடி
கடந்த தேர்தல்களை விட நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களில் பாமக வேட்பாளர் வெற்றி பெற்றது. குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தையும் அக்கட்டி தனதாக்கிக் கொண்டது.
பாட்டாளி மக்கள் கட்சி
காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் திமுக களம் கண்ட நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் ஜி.கே.வாசனின் தாமக (மூப்பனார்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக தேர்தல் களத்தைச் சந்தித்தது. பாஜக, அமமுக, பாமக, தேமுதிக, மநீம, நாதக ஆகிய கட்சிகள் தனித்தனியாகக் களத்தில் நின்ற நிலையில், மாநாகராட்சி, நகராட்சி உள்ளிட்டவற்றை பெரும்பாலும் திமுக கூட்டணியே கைப்பற்றியது.
வாக்கு சதவீதம்
அந்த தேர்தலில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 1.42 % வாக்குகளையும், நகராட்சி வார்டு உறுப்பினர் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி 1.64% வாக்குகளையும் பெற்றது. பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 1.56 % வாக்குகளை தனித்தே பெற்றது. இது அமமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக , மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சமத்துவ மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் , இந்திய ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை விட அதிகம்.
பாமக 2.0 திட்டம்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். கூட்டங்களிலும் சரி செய்தியாளர் சந்திப்புகளில் பேசும் அன்புமணி ராமதாஸ், பாமக 2.0 என்ற சொல்லாடலை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார். மேலும் 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்றும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாக நிச்சயம் வெற்றிபெறும் எனக் கூறி வருகிறார்.
பதவி ஆசை இல்லை
மேலும் தனக்கு பதவி ஆசை இல்லை என அவர் கூறியது அரசியல் நோக்கர்கள் இடையே கவனத்தைப் பெற்றது. 35 வயதிலேயே மத்திய அமைச்சராக இருந்து அனைத்து தலைவரையும் பார்த்துவிட்டேன். எனக்கு பதவி ஆசை இல்லை. தமிழகத்தில் ஏழை, பணக்காரன் வித்தியாசம் அதிகமாக உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியின் அடிப்படையில் எங்கள் பலத்தை நிரூபிப்போம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும்" எனவும் அன்புமணி கூறியிருந்தார்.
கள வியூகம்
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மது மற்றும் ஆன்லைன் ரம்மி தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகி வரும் நிலையில் மற்ற பிரச்சனைகளில் பிற கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆன்லைன் ரம்மி ஒழிப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நாள்தோறும் அறிக்கைகள் வெளியிட்டு அவற்றை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது மக்கள் மத்தியில் ஒரு சாஃப்ட் கார்னரை உருவாக்கி உள்ளது..
அதிக இளைஞர்கள்
மூத்த நிர்வாகிகள் மத்தியில் பேசினாலும் கூட இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறிவருகிறார். இதனால் பாமகவில் உள்ள இளைஞர்கள் புத்துணர்ச்சியோடு பணியாற்ற தயாராகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் பாமக கூட்டங்களை இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்வதையும் காணமுடிகிறது. மேலும் நீட்தேர்வு, மது ஒழிப்பு, ஆன்லைன் ரம்மி ,சுற்றுச்சூழல் மாசுபாடு, கல்வி நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் என தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து பேசி வரும் நிலையில் இது போன்ற ஒருமித்த கருத்துக்களை உடைய கட்சிகளை ஒன்றிணைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கலாம் எனவும், அதில் கிடைக்கும் முடிவுகளின்படி சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ளலாம் என அன்புமணி ராமதாஸ் நினைப்பதாக கூறப்படுகிறது.
பாட்டாளி நல கூட்டணி வாய்ப்பு
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாமக நிர்வாகி ஒருவர் மற்ற கட்சிகளை விட பாமகவின் செயல்பாடுகள் தனித்தே இருக்கிறது எனவும், ஸ்காண்டிநேவிய நாடுகளில் பின்பற்றப்படும் திட்டங்கள் குறித்து தமிழகத்தில் தெளிவான ஒரு பார்வையை பாமக எடுத்துச் செல்ல முயற்சிப்பதாகக் கூறினார். குறிப்பாக தமிழக நலன் சார்ந்த, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து பாமகவின் கள வியூகங்கள் இருக்கும், அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் பாமகவை அடைக்க சிலர் முயற்சிக்கும் நிலையில் அதை எல்லாம் உடைத்து பாமக நிச்சயம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும் எனவும் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நல கூட்டணி உருவானது போல, பாமக தலைமையில் "பாட்டாளி நல கூட்டணி" உருவாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. காலம் நிச்சயம் பதில் சொல்லும்...,!