நல்ல வேளை கஜா இங்க வரலை.. நீர் மூழ்கி கப்பல் மூலம் மின்கம்பியை சரி செய்ய சொல்லியிருப்பாரோ!- ராமதாஸ்
சென்னை: விமானங்கள் மூலம் மின்கம்பங்களை நட வேண்டும் என்ற அமைச்சர் திண்டுக்கல்லின் அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கஜா புயல் பாதித்த இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்துள்ளன. இதனால் கடந்த 10 நாட்களாக புயல் பாதித்த பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை. இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் மின் கம்பங்களை சரி செய்யும் பணியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
மின் கம்பங்கள்
அப்போது புயல் பாதித்த இடங்களில் விமானங்கள் மூலம் மின் கம்பங்களை நட வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதை கேட்டு அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகள் உறைந்துவிட்டனர். இதற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மறுத்த போது கூட இதுபோல் செய்ய முடியும் என்று திரும்ப திரும்ப கூறினார் சீனிவாசன்.
அறிவு மெய்சிலிர்த்தல்
அமைச்சரின் இந்த பேச்சு பெரும் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில் விமானங்கள் மூலம் மின் கம்பங்களை நட வேண்டும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - அய்யோ... அமைச்சர் சீனிவாசனின் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.
|
சாயக்கழிவுகள்
நல்லவேளை.... சென்னையில் புயல் தாக்கியிருந்தால் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தரைக்கடியில் உள்ள மின்கம்பிகளை சரி செய்யும்படி கூறியிருப்பாரோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது போல் அமைச்சர் கருப்பண்ணன் திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்படும் நுரை குறித்து கருத்து கூறுகையில் இது சாயக்கழிவுகளால் ஏற்படும் நுரை அல்ல.
கடலுக்குள்
மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் ஏற்படுவது என்று கூறியிருந்தார். இதனிடையே மெரினா கடற்கரையில் நுரை ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சென்னை மெரினா கடற்கரையில் அலையில் அடித்து வரப்படும் நுரை: செய்தி - ஒருவேளை நடுக்கடலில் யாரோ துணி துவைத்து விட்டு, சோப்பு போட்டு குளிக்கிறார்கள் போலிருக்கிறது. ஆய்வு செய்ய நமது சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணனை உடனடியாக கடலுக்குள் அனுப்பி வைக்கவும்! என்று குறிப்பிட்டிருந்தார்.