பெயர் வைத்த நாளா? உருவாக்கப்பட்ட நாளே தமிழ்நாடு நாள்! பாமக ராமதாஸ் உறுதி.. அரசுக்கும் ஒரு கோரிக்கை!
சென்னை : இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
1956 நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டது முதல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் நவம்பர் 1ஐ அந்தந்த மாநில நாளாக கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் அப்படி கொண்டாடப்படுவதில்லை.
தமிழகத்தில் திமுக சார்பில் அண்ணா முதல்வரான பிறகு 1967 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்தார்.

தமிழ்நாடு நாள்
தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 தேதியே 'தமிழ்நாடு தினம்' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் நவம்பர் ஒன்றுதான் தமிழ்நாடு நாள் என சில அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்திருந்தன. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், பலரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மொழிவாரி மாநிலங்கள்
இந்நிலையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். அது தான் தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழர்கள் அநீதிகளை எதிர்கொள்வதற்கும், தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோகவும் காரணமாகும். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியேற்போம்!

அரசுக்கும் கோரிக்கை
தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பு தமிழர்களின் மாநிலமாக 01.11.1956 அன்று நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு என்ற பெயரை அறிஞர் அண்ணா 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி தான் சூட்டினார். அந்த நாளையும் அதற்குரிய சிறப்புடன் கொண்டாட அரசு முன்வர வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications