மூணு வயசுல எங்க அம்மா ரத்தத்தை ரோட்ல பார்த்தேன்! ’சாகச’ மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த உதவி கமிஷனர்!
சென்னை : மூணு வயசுல எங்க அம்மா ரத்தத்தை ரோட்ல பார்த்தேன் என சாலைகளில் சாகசம் செய்ய வேண்டாம் என பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களுக்கு போக்குவரத்து உதவி கமிஷனர் அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் தங்களது கால்களை தரையில் தேய்த்தபடியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பொதுமக்கள் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
மேலும் மாணவர்கள் ரயிலிலும், பேருந்திலும் படியில் தொங்கியபடி சாகசம் செய்வதாகக் கூறி வ ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்தது.
சாலையில் சாகசம்
இதுகுறித்து, பேருந்து, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கூறினாலும், ஆசிரியர்கள் கூறினாலும் அதைப் பொருட்படுத்தாமல் சில மாணவர்கள் நடந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் சில நாட்களுக்கு முன், தி. நகரில் இருந்து, செம்மஞ்சேரி செல்லும் ஓடும் பேருந்தில் ஒரு பள்ளி மாணவன் , ஜன்னல் கம்மியைப் பிடித்தபடி, செருப்புக் காலாம் ஸ்கேட்டிங் செய்த மாணவனின் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த நிலையில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பிளஸ் 1 மாணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போலீசார் அறிவுரை
இந்நிலையில் அது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து போலீசார் அறிவுரை கூறி வருகின்றனர், இந்த நிலையில் போரூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் பஸ்ஸில் தொங்கியபடி சென்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி வந்தவர்களை அங்கு பணியில் இருந்த பரங்கிமலை போக்குவரத்து உதவி கமிஷனர் திருவேங்கடம் பஸ்சை மடக்கி பேருந்தில் தொங்கியபடி வந்த மாணவர்களை கீழே இறக்கி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தாயின் ரத்தம்
மேலும் தனது மூன்று வயதில் தனது தாய் விபத்தில் சிக்கிய போது அவரது ரத்தத்தை சாலையில் பார்த்ததாகவும் அவர் இறந்து விட்டதாகவும் கூறினார்,மேலும் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் இல்லை என்றால் அவர்கள் அனாதை, பிள்ளைகளுக்கு பெற்றோர் இல்லை என்றால் பிள்ளைகள் அனாதை ,மனித உயிர் விலைமதிப்பற்றது இதுபோன்ற செயல்களில் எல்லாம் ஈடுபடக் கூடாது என அறிவுரை வழங்கினார்.
பாராட்டு
மேலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களின் அடையாள அட்டைகளை பெற்று கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அவர்கள் குறித்த தகவல்களை தெரிவித்து பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறவும் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது உதவி கமிஷனரின் இந்த வேண்டுகோள் வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.