விடாமல் துரத்தும் வழக்குகள்.. மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
சென்னை: துணை நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் இன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். துணை நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவருமான மீரா மிதுன் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
பட்டியலினத்தவர்கள் பற்றி மிகவும் சர்ச்சையாக பேசியதால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

மீரா மிதுன் கைது
அதன்பின்னர் தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று அவர் போலீசாருக்கு சவால் விட்டார். மீரா மிதுனை கேரளாவில் கடந்த 14-ம் தேதி சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்து இருந்த மீரா மிதுனுக்கு நீதிமன்ற ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டது.

மேலும் ஒரு வழக்கு
இதற்கிடையே மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மீரா மிதுனை மீண்டும் கைது செய்தனர். ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் இந்த புகாரை கொடுத்து இருந்தார். அதன் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

ஜாமீன் வழங்கியது
இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கேட்டனர். இதற்கிடையே ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த வழக்கில் மீரா மிதுனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஏற்கெனவே எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ள்ளார். அதற்கான ஜாமீன் மனுவை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் ஜாமீன் பெற்றிருந்தாலும் மீரா மிதுனால் வெளியே வர முடியவில்லை.

அடுத்த அடி
இந்த நிலையில் மீரா மிதுனுக்கு மேலும் ஒரு அடியாக அவர் மீது மேலும் ஒரு வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதாவது ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2019-ம் ஆண்டு கொடுத்த புகாரின்பேரில் மீராமிதுன் மீது எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழும்பூரில் உள்ள நடசத்திர விடுதியில் மீரா மிதுன் பிரஸ் மீட் வைத்தார். அந்த செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையை கடுமையாக விமர்சித்து இருந்தார் மீரா மிதுன்.
Recommended Video

குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இதற்கு ஹோட்டல் நிர்வாகம் ஆட்சேபித்து மீரா மிதுனை பிரஸ் மீட் நடத்த வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டனர். அப்போது மீரா மிதுன் விடுதி மேலாளரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து விடுதி மேலாளர் அளித்த புகாரின்பேரில் அவதூறாக பேசுதல் (294-பி), கொலைமிரட்டல் (506(1)) ஆகிய பிரிவின் கீழ் எழும்பூர் போலீஸார் மீரா மிதுன் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் போலீஸார் இன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக நாளை நீதிமன்றத்தில் மீரா மிதுனை போலீஸார் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications