கோடநாடு வழக்கு: வெளிச்சத்துக்கு வந்த ‘மூடி மறைக்கப்பட்ட தகவல்கள்’ - போலீசார் ‘பரபர’ விளக்கம்!
சென்னை : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோடநாடு வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது எனவும் போலீசார் தரப்பபில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான அரசின் தலைமை குற்றசியல் வழக்கறிஞர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடநாடு விவகாரம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்த ஏராளமான ஆவணங்களும் திருடு போனதாக குற்றச்சாட்டப்பட்டது. இது குறித்து கோவை மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த விசாரணை சூடுபிடித்துள்ளது.

தனிப்படை போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சசிகலாவின் வழக்கறிஞர் நாமக்கல்லை சேர்ந்த செந்தில் என்பவரிடமும் சமீபத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவரிடம் பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.

சசிகலாவின் வழக்கறிஞர்
ஜெயலலிதா தொடர்பான பல்வேறு வழக்குகளை கவனித்து வந்த வழக்கறிஞர் செந்தில், சசிகலாவின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. பல்வேறு வழக்குகள் தொடர்பான ஆதாரங்கள், கோடநாடு பங்களாவில் இருந்ததாக தெரிகிறது. அவற்றின் விவரங்களை செந்திலிடம் கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. v

இன்று விசாரணை
இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

மூடி மறைக்கப்பட்ட தகவல்கள்
தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மேலும், தொடர் விசாரணை நடத்தப்பட்டதில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வழக்கறிஞர் சொன்ன விஷயத்தால் பரபரப்பு
இதையடுத்து வழக்கின் விசாரணை குறித்த அறிக்கை, வழக்கினுடைய விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார், விசாரணையை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஐகோர்ட்டில் காவல்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications