இங்கயும் ஆரம்பிச்சுட்டீங்களா.. மெரினா மரப்பாதையில் முகாமிட்ட ஜோடிகள்! லத்தியுடன் நிற்கும் போலீசார்!
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளின் மரப்பாதையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கிலும், மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் தற்போது அந்த பகுதியில் காவல்துறையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
வங்கக் கடலில் காற்றின் ரீங்காரத்துடன், உருண்டு, புரண்டு, மேலெழும்பி, பாய்ந்து கரையை நோக்கி ஓடோடி வரும் சாதாரண அலை முதல் ராட்சத அலை வரை மெரினா கடற்கரையில் கடலின் அருகில் இருந்து அதன் அழகை பார்த்து ரசிக்க விரும்பாதவர்கள் இவ்வுலகில் எவரும் இருக்க முடியாது.
அப்படிப்பட்ட இயற்கை அழகை மாற்றுத்திறனாளிகள் அருகில் இருந்து கண்டு களிப்பது, ரசிப்பது, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது என்பது அவர்களுக்கு நீண்டகாலமாக எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

மெரினா கடற்கரை
ஏனெனில் மெரினா கடற்கரையில் பல வரலாற்று சரித்திரம் கொண்ட "சீரணி அரங்கம்" இருந்த வரை அதன் அருகில் இருந்த பாதை வழியாக மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் கடலின் அருகில் வரை சென்று கடல் நீரில் கால் நனைத்து அதன் அழகை ரசிக்கும் சூழல் இருந்தது. அதன் பிறகு பல்வேறு காரணிகளால் 2003ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி இரவோடு இரவாக சீரணி அரங்கம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் மெரினா கடற்கரைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகில் செல்ல முடியாமல் கடற்கரையின் உள்வட்ட சாலையிலயே இருந்து ஏக்கப் பெருமூச்சு விட்டு திரும்பும் சூழ்நிலையே நீடித்து வந்தது.

சென்னை 2.0
இந்த நிலையில் தற்போதைய திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று பிறகு அதற்கு தீர்வாக "சிங்காரச் சென்னை 2.0" திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக 1 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் மரத்தினால் ஆன நிரந்தர பாதை அமைக்கப்பட்டு அவர்களின் பயன்பாட்டிற்காக அதை ஞாயிற்றுக்கிழமை சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

அத்துமீறல்
இது வரை பிரதான சாலையில் இருந்து வங்கக்கடலைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டும், அதன் ஆழகை கண்டு ரசிக்க வேண்டும் என்கிற நீண்ட கால கனவை மரத்தினால் ஆன நிரந்தர பாதை அமைத்ததன் மூலம் கனவு நனவாகியுள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ள மரப்பாதையை அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்படுத்துவதாலும், நடைபாதையின் பக்கவாட்டின் இருபுறமும் உள்ள கைபிடியின் உயரம் 2.5அடி முதல் 3அடி வரை மட்டுமே இருப்பதால் இரண்டுபுறமும் உள்ள கைபிடியின் மீது இளைஞர்கள், கடற்கரைக்கு வரும் இளம் காதலர்கள், சிறுவர்கள் ஏறி அமர்வதாலும் இதனால் இந்த மரப்பாதை விரைவில் சேதமடையும் சூழல் ஏற்பட்டது.

காவல்துறை பாதுகாப்பு
எனவே மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக உருவாக்கப்பட்டு அந்த மரப்பாதையில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தப்படுவதை தடுக்க நுழைவாயிலில் வாயில் கதவு பொறுத்தி, வழிபாட்டு தலங்களில் மாற்றுத்திறனாளிகளும் அவர்களோடு குடும்ப உறுப்பினர் ஒருவரும் அனுமதிக்கப்படுவது போல் இங்கும் அதேபோல் டோக்கன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளோடு அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் அனுமதிக்க வேண்டும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

அரசுக்கு நன்றி
இந்நிலையில் அந்த மரப்பாதையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கிலும், மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் தற்போது அந்த பகுதியில் காவல்துறையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது . மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் ஒருவருக்கு மட்டுமே சிறப்பு பாதையில் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு, தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications