”சமூக விரோதி போல் பேசுகிறார் முத்தரசன்” உடனே கைது செய்ய வேண்டும்.. நாராயணன் திருப்பதி ஆவேசம்!
சென்னை: விநாயகர் குறித்து தவறாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனை கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் தமிழகத்தில் வளர முயற்சித்து வருகிறது. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பின்னர் தமிழக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
ஆர்ப்பாட்டம், போராட்டம், குற்றச்சாட்டுகள், ஆளுநருன் சந்திப்பு என முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை கண்டு அச்சத்தில் இருக்கிறார்கள். இங்கு தொடர்ந்து கூட்டணி ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.

நாராயணன் திருப்பதி
கடந்த சில ஆண்டுகளில் பாஜக தான் அதிகமுறை தனித்து போட்டியிட்டுள்ளது. ஆளும் கட்சியான திமுக தனித்து நின்றால் கூட, பெரும்பான்மை கிடைக்காத சூழல் தான் இருக்கிறது. அதனால் தான் திமுக கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது.தமிழ்நாடு வரலாற்றில் ஓரிரு முறை அதிமுக தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளது. அதைவிட அதிகமாக பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது.

பாஜக ஆட்சியமைப்போம்
வரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், பாஜக தனித்து போட்டியிட்டு நிச்சயம் வெற்றிபெறும். நிச்சயம் ஆட்சியமைப்போம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை தவிர்த்து வேறு கட்சிகளுக்கு பலம் இல்லை. அதனால் இன்றைய சூழலில், தனித்து போட்டியிட்டால் பாஜகவுக்கு வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் படி ஏறுவோம்
தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் மீது பாஜக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் நீதிமன்றம் செல்வோம். ஏனென்றால் பல்வேறு குற்றச்சாட்டுகள், ஊழல் செய்யப் போகிறார்கள் என்றுதான் சொல்லி வந்துருக்கிறோம். அதனால் பிஜிஆர், ஆவின் உள்ளிட்ட டெண்டர்களை கொடுக்கப் போகிறார்கள் என்று பாஜக குரல் கொடுத்த பின், தமிழக அரசு பின் வாங்கியுள்ளது.

முத்தரசன் பற்றி கருத்து
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினாலே, எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள். அதேபோல் விநாயகரைப் பற்றி தவறாக பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். அவர் சமூக விரோதி போல் பேசுகிறார். அதனால் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications