ரோட்டுல பூசணிக்காய் உடைச்சா அவ்ளோதான்.. கடைகள், பொதுமக்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை!
சென்னை : ஆயுத பூஜையையொட்டி சாலைகளில் பூசணிக்காய், தேங்காய் உடைத்து விபத்து ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு வணிக நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பூஜை செய்து, பூசணிக்காய் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சாலைகளின் நடுவே பூசணிக்காய்கள், தேங்காய்களை உடைத்து, அப்படியே விட்டுச் செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் பூசணிக்காய், தேங்காய் உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுத பூஜை
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை ஒட்டி இன்றும், நாளையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் நேற்றே ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் இன்று ஆயுத பூஜை விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த விமரிசையான கொண்டாட்டம் சில நேரங்களில் மற்றவர்களுக்கு இடையூறுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.

வாகன ஓட்டிகள்
ஆயூத பூஜை கொண்டாட்டத்தில், சாலைகளின் நடுவே பூசணிக்காய்களை உடைத்து அப்படியே விட்டுச் செல்வதால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதில், சாலையில் விழும் வாகன ஓட்டிகள் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதும் ஆபத்தும் உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளால், ஒவ்வொரு ஆண்டும் வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வருகின்றனர்.

போலீஸ் எச்சரிக்கை
இதுபோன்ற விபத்துகளை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பொதுமக்கள், கடை மற்றும் வணிக நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் தேங்காய், பூசணிக்காய்களை உடைக்க வேண்டாம். பாதுகாப்பான முறையில் தங்களது பூஜைகளை செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பூசணிக்காய் உடைத்தால்
பூசணிக்காய்களை சாலைகளில் உடைத்து விபத்து ஏற்பட்டால், விபத்து ஏற்பட காரணமானோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல, புதுச்சேரியிலும், சாலையின் நடுவே பூசணிக்காய் உடைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காயால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications