பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அருளானந்தம் ஜாமீன் மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை முடிக்க ஹைகோர்ட் ஆணை
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தினசரி அடிப்படையில் வழக்கை விசாரித்து விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தினசரி விரைந்து முடிந்து ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலரை பாலியல் கொடுமை செய்து, அதனை விடியோ படம் எடுத்த கும்பல் மிரட்டி பணம் பறித்த சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்வலைகள் எழுப்பியது.
பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து பதிவு செய்தது. பாலியல் கொடுமை வழக்கில், திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கானது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தம் ஜாமீன் கேட்டு கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்க முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக மேலும் சில பெண்கள் புகார் அளித்துள்ளனர். எனவே, அருளானந்தத்துக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை அழித்துவிடுவார்" என சி.பி.ஐ தரப்பில் வாதாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹைகோர்ட்டில் விசாரணை
இதனையடுத்து அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். சிபிஐயில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

காவல்துறை அதிகாரி
தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியை நியமித்து உதவ தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

தினசரி விசாரிக்க ஆணை
இதனிடையே இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

சூடு பிடிக்கும் வழக்கு
சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் உத்தரவிட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏற்கனவே ஐந்து பேர் மட்டுமே புகார் அளித்திருந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கில் மேலும் மூன்று பெண்கள் பேர் புகார் கொடுத்துள்ளதை அடுத்து புகாரளித்த பெண்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் கைதுசெய்யப்படவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications