மேலதிகாரிக்கோ, அரசுக்கோ பொன்.மாணிக்கவேல் ரிப்போர்ட் செய்ய வேண்டியதில்லை: ஹைகோர்ட் உத்தரவு
Recommended Video
சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் தனது விசாரணை விவரங்களை சீலிட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் போதுமானது என்றும், உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் எந்த அறிக்கையும் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தெரிவித்தார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் இன்று பணி மூப்பு காரணமாக பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில், அவருக்கு கூடுதலாக ஓராண்டு பதவி நீட்டிப்பு செய்து, சிறப்பு அதிகாரியாக பணிகள் தொடர சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐக்கு மாற்ற, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
இனி விட மாட்டேன்.. விரட்டி வேலை பார்ப்பேன்.. எல்லா சிலையும் திரும்ப வரும்.. பொன் மாணிக்கவேல் அதிரடி!
தமிழக அரசு வாதம்
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த யானை ராஜேந்திரன் கூறியதாவது: சிலை கடத்தல் வழக்கை விசாரிப்பதற்கு எங்களிடம் ஒரு போலீஸ் அதிகாரியும் கிடையாது, எனவே சிபிஐக்கு வழக்கை மாற்றச் சொல்லி கேட்டோம் என்று தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
தேவையில்லை
அப்போது குறுக்கிட்ட நிருபர் ஒருவர், சிலை தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் என்ற அதிகாரியை, தமிழக அரசு இன்று நியமனம் செய்துள்ளதே. அவருக்கு கீழ்தான் பொன்.மாணிக்கவேல் பணியாற்ற வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த யானை ராஜேந்திரன், தேவையில்லை என்றார்.
நீதிமன்றம்
மேலும் அவர் கூறியதாவது: நீதிமன்றம் தெளிவாக கூறி விட்டது. பொன்.மாணிக்கவேல் எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒரு சீலிட்ட கவரில் அடைத்து நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டுமே தவிர, எந்த அதிகாரிக்கும் அல்லது அரசுக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். எனவே பொன்.மாணிக்கவேல் இனிமேல் தனது நியாயமான செயல்பாட்டை, தொடர்வதில் எந்த தடையும் இல்லை.
உச்ச நீதிமன்றம்
ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நாளை நான் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய உள்ளேன். இதை விட்டு விடுவேனா நான்? இவர்கள் செய்வது அனைத்துமே மிகப்பெரிய சதியாக உள்ளது. எனவே இதை நான் விடமாட்டேன். சிலை கடத்தலில் ஈடுபட்ட பெரிய பெரிய ஆட்கள், கோடீஸ்வரர்கள், அதிகாரிகளை காப்பாற்றுவதற்காகத்தான் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இன்று அது முறியடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு யானை ராஜேந்திரன் தெரிவித்தார்.