கடல் விழுங்கிய சோழர்கால பூம்புகார்.. டிஜிட்டலில் மறு உருவாக்கம்.. அறிவியல் தொழில்நுட்ப துறை அசத்தல்
சென்னை: சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, கடற்கோள் காரணமாக, வரலாற்றிலிருந்து மறைந்துபோன தமிழ்நாட்டின் சோழ வம்ச துறைமுக நகரம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தலைமையிலான கூட்டமைப்பின் முயற்சிகளால் டிஜிட்டல் முறையில் புனரமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பூம்புகார் நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் கடல் மட்டம் உயர்ந்ததால் நீரில் மூழ்கியிருக்கக் கூடும் என்கிறார்கள். சங்க தமிழ் இலக்கிய படைப்புகளில் இதுகுறித்த குறிப்புகள் உள்ளன.
தமிழ் இலக்கியம், தொல்பொருள், வரலாறு, கல்வெட்டு, நீருக்கடியில் ஆய்வு மற்றும் புவி அறிவியல் பற்றிய பல ஆய்வுகள் இருந்தபோதிலும், பூம்புகாரின் ஆரம்ப காலகட்டத்தின் சரியான இருப்பிடம், அதன் வயது, பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள், நேரம்-தொடர் இடம்சார்ந்த பரிணாம வளர்ச்சி, காவிரி நதியின் முகப்பில் உள்ள இடம் மற்றும் அதன் அழிவின் காரணங்கள் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் கிடைக்கப்படாமல் உள்ளன.
டிஜிட்டல்
இந்த ஆய்வில் நீருக்கடியில் புகைப்படங்கள் எடுத்தல், தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் கடல் படுக்கை துளையிடுதல், தொலைநிலை உணர்திறன் அடிப்படையிலான புவி இயற்பியல் ஆய்வுகள் ஆகியவை பயன்படுத்தப்படும். இந்த ஆய்வு விரிவான தகவல்களைக் பெற வாய்ப்புள்ளது. கடந்த 20,000 ஆண்டுகளில் நிலச்சரிவு, கடல் மட்ட உயர்வு, காவேரியின் இடம்பெயர்வு, வெள்ளம், சுனாமி, சூறாவளி மற்றும் கடல் அரிப்பு போன்ற புவி இயக்கவியல் செயல்முறைகளின் காட்சிப்படுத்தலும் இந்த ஆய்வில் அடங்கும். ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பூம்புகாரின் வாழ்க்கை வரலாற்றை டிஜிட்டல் முறையில் உருவாக்க உதவும்.
வெவ்வேறு திசைகள்
குஜராத்தின் துவாரகா நகரத்திலும் இதேபோன்ற திட்டம் தொடங்கப்பட்டு வருவதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் டாக்டர் கே.ஆர். முரளி மோகன் தெரிவித்தார். "துவாரகாவை வரைபடமாக்க ஏற்கனவே நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன, ஆனால் பூம்புகாரில் அதிகம் பணிகள் நடைபெறவில்லை. இந்த இரண்டு நகரங்களையும் நாம் பார்த்தால், அவை குறுக்கான திசையில் எதிர்மாறாக இருக்கும். வங்கக் கடலில் நடக்கும் புவி இயக்கவியல் என்ன? இதேபோன்ற விஷயங்கள் மறுபுறத்திலும் நடந்ததா என்பதை ஆய்வு செய்தால், புவியியல் ரீதியாக இந்த இரண்டு தளங்களும் இணைக்கப்பட கூடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பி
பூம்புகாரின் புனரமைப்பு, என்பது, இந்திய டிஜிட்டல் பாரம்பரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் முதல் திட்டமான ‘டிஜிட்டல் ஹம்பி' கண்காட்சி தற்போது தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள பழம்பெரும் நகரமான ஹம்பி இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. "பாரம்பரிய ஆவணங்களை ஆராய்ந்து நமது நினைவுச்சின்னங்களை டிஜிட்டல் முறையில் விர்ச்சுவல் இடங்களாக மாற்றுவதற்கு பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களுடன் நாங்கள் செயல்படுகிறோம்" என்று மோகன் மேலும் கூறினார்.
ஆய்வுகள்
இரண்டாம் கட்டத்தில், குஜராத் மற்றும் தமிழகத்தில் தற்போது நீருக்கடியில் இருக்கும் பாரம்பரிய நகரங்களை ஆவணப்படுத்த முயன்று வருகிறோம் என்று கூறும் மோகன், இவை எவ்வாறு கட்டப்பட்டன, கட்டமைப்புகளின் புகைப்படங்கள் கிடைக்கின்றனவா மற்றும் நகரங்கள், நீரில் மூழ்குவதற்கு காரணமான விஷயங்கள் என்ன என்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதில் இப்போது கவனம் செலுத்தப்படுகிறது, என்றும் அவர் கூறினார்.
கல்வியாளர்கள்
பூம்புகார் திட்டத்திற்காக, பண்டைய நகரத்தின் வரலாற்றைக் கண்டறிய 13 கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு கேட்டுள்ளது. இவற்றில், ஸ்கூல் ஆஃப் மரைன் சயின்சஸ், அழகப்பா பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள கடல் கல்வி மற்றும் பயிற்சி பல்கலைக்கழகம், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவையும், அடங்கும். இந்திய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வுகளில், இந்த நகரம் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, இப்போதுள்ள பூம்புகார் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதியில் அமைந்திருந்தது தெரியவந்துள்ளது.