ஓய்வூதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் குடும்பத்தினருக்கு தபால் துறை முக்கிய அறிவிப்பு
மதுரை: தென்மண்டல தபால்துறை ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்க உள்ளது. எனவே, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். அதேபோல் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று தபால்துறை மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் குறைகளும் இந்த முகாமில் பரிசீலனை செய்யப்படும்
பொதுவாக ஒவ்வொரு குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை தபால்துறை சார்பில் ஓய்வூதியதார்கள் குறைதீர் முகாம் மண்டல வாரியாக நடைபெறுவது வழக்கம். அந்த முகாம்களில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதங்களுக்கு உடனே தீர்வு காண முடியும்.

அதேபோல் ஓய்வூதிய பலன்கள் அல்லது குடும்ப ஓய்வூதிய பலன்கள் முறையாகக் கிடைக்காமல் இருந்தால், அது குறித்து புகார் அளித்து அவற்றைச் சரிசெய்ய வாய்ப்பாக அமையும். அதேபோல் தபால்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் ரயில்வே ஊழியர்களின் குறைகளும் இங்குப் பரிசீலிக்கப்படும்.
மதுரையில் உள்ள தென்மண்டல தபால்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தென்மண்டல தபால்துறை ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்க உள்ளது. எனவே, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தபால் அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.
அதாவது, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம், ஓய்வூதிய பலன்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் இருப்பது ஆகிய குறைகளை இந்த முகாமில் தெரிவிக்கலாம். ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று தபால்துறை மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் குறைகளும் இந்த முகாமில் பரிசீலனை செய்யப்படும். இந்த குறைகள் தொடர்பாக ஏற்கனவே மனு கொடுத்து தபால் கண்காணிப்பாளர் பதிலில் திருப்தி அடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை இந்த முகாமிற்கு அனுப்பி வைக்கலாம்.
இந்த முகாமில் நேரடியாக எந்த புகாரும் பெறப்படாது. எனவே, குறைகளை அனுப்புபவர்கள் பெயர், செல்போன் எண், முழு முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் ஓய்வூதியம் தொடர்பான குறைகளைத் தெளிவாக எழுதி வருகிற 25-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். குறைகள் அனைத்தும் சாதாரண, பதிவு மற்றும் விரைவு தபால் மூலம் மட்டும் அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் மூலம் அனுப்பப்படும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
குறைகளை பத்மாவதி, கணக்கு அலுவலர், தென்மண்டல தபால்துறைத்தலைவர் அலுவலகம், மதுரை-2 என்ற முகவரிக்கு அல்லது [email protected] என்ற இ.மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். குறைதீர்ப்பு முகாம் அடுத்த மாதம் 18-ந் தேதி தென்மண்டல தபால்துறைத்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications