மீண்டும் பவர் கட் வரலாம்... போய் ஜெனரேட்டர் வாங்குங்க மக்களே! - எச்சரிக்கும் அண்ணாமலை
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் அனைவரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்பாக பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்திடம் தமிழ்நாடு அரசு மின்வாரியமான டான்ஜெட்கோ ஒப்பந்தம் செய்தது.
ஆனால், அந்த நிறுவனத்திடம் வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் மீண்டும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து இருக்கிறது.

பி.ஜி.ஆருக்கும் கோபாலபுரத்துக்கும் தொடர்பு
கோபாலபுரத்தை சேர்ந்த நபர் பி.ஜி.அர். நிறுவனத்துக்கு பணம் கொடுத்து இருக்கிறார். பி.ஜி.ஆர். எனர்ஜிக்கும் திமுகவுக்கும் இரத்த பந்தம் உள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு நான் குற்றம்சாட்டியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பி.ஜி.ஆர். நிறுவனத்துக்காக ஆஜராகும் வழக்கறிஞர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்தான். 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது இதே பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனம் மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்தத்தை வாங்கினார்கள்.

பல முறைகேடுகளில் ஈடுபட்ட நிறுவனம்
2010 ஆம் ஆண்டு சி.ஏ.ஜி. தணிக்கையில் பி.ஜி.ஆர். எனர்ஜியால் அதிக நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பி.ஜி.ஆர். நிறுவனத்தால் அந்த தொழில்நுட்பத்தை முறையாக கையாள முடியவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆண்டுகளாக லாபத்தையே காட்டாத பி.ஜி.ஆர். நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.

மீண்டும் மின்வெட்டு வரலாம்
10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் அதிகளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் பி.ஜி.ஆர். போன்ற நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்ததுதான். அனைவரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், மீண்டும் மின்வெட்டு ஏற்படலாம். 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்தில் சோதனையிட்டபோது போலியாக ரூ.113 கோடி பில் கண்டெடுக்கப்பட்டது. அந்த ரூ.113 கோடி அரசு அதிகாரிகளும் லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு பாஜக சார்பில் புகாரளிப்போம்
திடீரென பி.ஜி.ஆர். நிறுவனம் எப்படி புனிதமாக மாறியது. அவர்கள் மீது ஏதாவது தீர்த்தம் தெளிக்கப்பட்டதா? நமது கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும். திமுக ஆட்சி முடிவதற்குள் ரூ.36,000 கோடி அளவுக்கு பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கு டான்ஜெட்கோ கொடுக்க உள்ளது. திமுக ஆட்சி 2026 அல்லது 2024-லும் முடியலாம்.
இதுகுறித்து செபிக்கு தமிழ்நாடு பாஜக புகார் கடிதம் எழுத உள்ளது. அதேபோல் மத்திய கணக்கு தணிக்கை வாரியம் மற்றும் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கு கடிதம் எழுத இருக்கிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications