மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்த மதுரை ஹைகோர்ட் கிளை- தமிழக அரசு அப்பீல் மனு மீது இன்று விசாரணை
சென்னை: மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மின்சார வாரியம் மனு தாக்கல் செய்திருக்கிறது. தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
2021-22 -ல் மின்சார வாரியத்தின் மொத்த கடன் ரூ.1.58 லட்சம் கோடி. 2021-22-ல் மின்வாரியம் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டித் தொகை ரூ.16,511 கோடி. ஆகையால் மின் கட்டண உயர்வுதான் தீர்வு எனவும் கூறப்படுகிறது. மின் கட்டண உயர்வை அமல்படுத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தும் இருந்தார்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் மனுத் தாக்கல் செய்தார். அதில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர், 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை உறுப்பினர் இல்லை. இந்த நியமனம் மேற்கொள்ளப்படும் வரை மின் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தொழில்நுட்ப உறுப்பினர் காலி இடத்தை தமிழக அரசு நியமித்திருக்கலாம். மின்சார ஒழுங்கு முறை ஆணைய சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும் வரையில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.